சென்னை : ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக முன்னாள் கேப்டன் தோனி எப்போதும் உள்ளார். அவரை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
கிரிக்கெட் போட்டிகளை சிறப்பாக முடித்துக் கொடுப்பவர் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சியாளர் தோனியை புகழ்ந்திருந்தார்.
கிரிக்கெட் மட்டுமின்றி பேட்மின்டன், புட்பால், பைக் ரைடிங் என்று அனைத்து தளங்களிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வரும் தோனி, குடும்பத் தலைவராக, அப்பாவாகவும் சிறப்பாக வலம் வருகிறார்.
கேப்டன் கூல் என்று அழைக்கப்படுபவர் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கவில்லை. இருந்தாலும் என்ன, எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்கன்னு சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமின்றி இந்தியா, மேலும் சர்வதேச ரசிகர்களும் கூறுமளவிற்கு இன்றும் அவரது மவுசு குறையவில்லை.
ஏறக்குறைய 39 வயதை நெருங்கிவரும் தோனி, ரிடையர்ட் ஆக வேண்டும் என்று யாருமே விரும்பவில்லை. அவர் மீண்டும் இந்திய அணிக்குள் வருவாரா என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகனுக்கும் உள்ளது. இப்பொழுதும் ஸ்டார் ஸ்போர்ட்சில் ஒளிபரப்பப்படும் இவரது ஆட்டங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஒவ்வொருமுறையும் இவர் பந்துகளை தடுத்து ஆடும்போது பந்து மட்டுமின்றி ரசிகர்களின் இதயமும் தெறித்துதான் போகிறது.
கிரிக்கெட்டில் இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ள தோனி, அதுமட்டுமின்றி பன்முகத் திறமை உள்ளவராக உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கிரிக்கெட் பேட்டை போட்டுவிட்டு பேட்மின்டன் விளையாடிய வீடியோவை பகிர்ந்தார் தோனி. ரசிகர்களின் இதயம் கொள்ளை போனது. இதுமட்டுமின்றி இவர் ஒரு பைக் பிரியரும்கூட. தன்னுடைய வீட்டில் பிரத்யேக பைக் கலெக்ஷன்களை இவர் வைத்துள்ளார்.
இவர் கடந்த 2ம் தேதி சென்னை வந்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் கலந்துகொண்டபோது, ரசிகர்கள் திருவிழாக் கூட்டம் போல சிதம்பரம் மைதானத்திற்கு படையெடுத்தனர். இவரின் பயிற்சி ஆட்டத்திற்கான வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ந்தது சிஎஸ்கே. தற்போது ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், அது தன்னுடைய வீடியோ சேரிங்கை நிறுத்திக் கொள்ளவில்லை.
தன்னுடைய பயிற்சி ஆட்டத்தின்போது, பயிற்சியாளர்களுடன் இணைந்து தோனி விளையாடிய கால்பந்தாட்டம் குறித்த வீடியோவை தற்போது சிஎஸ்கே தன்னுடைய பக்க்ததில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்துள்ளனர். அவர்களை பொறுத்தவரை தங்களது தலையை எந்த வடிவத்திலாவது பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான்.