ஷ்ரேயாஸ் ஐயர் புகழ்ச்சி
முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தற்போதைய சிஎஸ்கே கேப்டன் தோனி, அவருடைய பொறுமையான செயல்பாடுகளால் சக வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் அனைத்து வீரர்களாலும் பாராட்டப்படுபவர். இந்நிலையில் தோனி அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
சிறந்த உதாரணம் தோனி
இந்தியா டுடேவிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள அவர், தோனி அதிகமான கோப்பைகளை வெற்றி கண்டுள்ளதை சுட்டி காட்டியுள்ளார். நெருக்கடியான நேரங்களிலும் எவ்வாறு பொறுமையாக அந்த சூழலை கையாள்வது என்பதற்கு சிறந்த உதாரணமாக தோனி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு தெரிவித்த ஐயர்
சிறப்பாக செயல்படாத பௌலர்களையும் ஊக்குவித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் தோனி சிறப்பானவர் என்று தெரிவித்துள்ள ஐயர், ஒரு கேப்டனாக அவர் பாராட்டுக்கு உரியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் இருந்து கற்று கொள்வதற்கு அதிகமாக உள்ளதாகவும் ஐயர் கூறியுள்ளார்.
சிறப்பாக செயல்படும் ஐயர்
இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர். இதுவரை 4 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடியுள்ள நிலையில், அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து தன்னுடைய அணியை முன்னிலையில் வைக்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஐயர்.