பயிற்சி ஆட்டங்கள் ரத்து
13வது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மும்பையில் நேற்று கூடிய ஐபிஎல் நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளின் பயிற்சி ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் அற்ற உள் அரங்குகளில் நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்களின் உற்சாகம்
இந்த மாதத்தின் துவக்கத்திலிருந்தே சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடரை முன்னிட்டு பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை குறிப்பாக கேப்டன் தோனியை காண்பதற்காக தினந்தோறும் ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போன்ற அதே உற்சாகத்துடன் மைதானத்திற்கு வந்து சென்றனர்.
ஓய்வு பெற்ற தோனி
கடந்த 6 மாதங்களுக்கு மேல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 2ம் தேதி முதல் சிஎஸ்கே அணிக்காக அவர் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றார். இந்நிலையில் பயிற்சி ஆட்டங்களுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளதையடுத்து தன்னுடைய பயிற்சி ஆட்டங்களை தோனி முடித்துக் கொண்டுள்ளார்.
உற்சாகமான தோனி
இதையடுத்து சிதம்பரம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், தோனிக்கு உற்சாகமாக விடையளித்தனர். ரசிகர்களுடன் பேசக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தாலும், அதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல், தோனி ரசிகர்களுடன் கலந்துரையாடியும், கைகுலுக்கியும், அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விசில் போட கோரிக்கை
ரசிகர்களுடன் தோனி கலந்துரையாடிய இந்த வீடியோவை சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், இது உங்க சொந்த மண் என்றும் தொடர்ந்து விசில் போடுங்க என்றும் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கிடையில் அவர் அன்புடன் விடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.