சிங்கம் களமிறங்கிடுச்சி
கால்பந்தாட்டத்தில் விருப்பமுடைய, 1999-2000மாவது ஆண்டில், தனது 18வது வயதில், ரஞ்சி கோப்பை தொடரில், பீகார் அணிக்காக டோணி களமிறங்கினார். 2004 டிசம்பர் 23ம் தேதி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோணி முதல்முறையாக இந்தியாவுக்காக களம் கண்டார். 2005 டிசம்பர் 2ம் தேதி, இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக களமிறங்கினார். 2007ல் இந்திய டி20 அணி அணிக்கு கேப்டனாக்கப்பட்டு, அந்த டி20 உலக கோப்பையை வென்றார்.
மூன்றிலும் சாம்பியன்
டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் டோணியாகும். இந்த ஒரு சாதனைக்காகவே, இந்திய ரசிகர்களில் பெரும்பாலானோர் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
ஆஸி.யிலும் அசத்தல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரை இந்தியா வென்றதில்லை என்ற குறையை போக்கியவர். 2008ல் நடந்த காமன்வெல்த் பேங்க் சீரிசில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
வெளிநாட்டிலும் கிங்
வெளிநாடுகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர். மொத்தம், 59 போட்டிகள். முந்தைய பெஸ்ட் 58 வெற்றிகள். இது கங்குலி தலைமையில் கிடைத்தது.
சூப்பர், கீப்பர்
இந்தியாவின் தலை சிறந்த விக்கெட் கீப்பர். ஒருநாள் போட்டிகளில் மொத்தம், 323 அவுட்டுகளில் பங்களிப்பை கொடுத்துள்ளார். இதில் 238 கேட்சுகளாகும், 85 ஸ்டம்பிங்குகள் ஆகும்.
அசாருதீனையும் முந்தினார்
இந்திய அணிக்காக அசாருதீன் 174 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருந்தார். அந்த சாதனையை முந்தி 200வது போட்டியை நோக்கி பாய்ந்து கொண்டுள்ளார் டோணி. இதன்மூலம் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ராசிக்கார பையன்
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் டோணி. 101 ஒருநாள் போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.
கீப்பர்-கேப்டன்
விக்கெட்கீப்பர்-கேப்டன் என்ற வகையில் உலகிலேயே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர். 175 போட்டிகளை கடந்துவிட்ட டோணி இனிமேல் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் எந்த விக்கெட் கீப்பர்-கேப்டனும் இல்லை.
பேட்டும் பிடிப்போம்
ஒருநாள் போட்டி வரலாற்றில் டோணி அடித்த 183 ரன்கள்தான், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.
ஐசிசியின் செல்லப் பிள்ளை
ஒருநாள் கிரிக்கெட்டுக்காக ஐசிசி தேர்வு செய்யும் உத்தேச அணியில் 8 முறை (7 முறை தொடர்ச்சியாக) இடம் பிடித்த வீரர் டோணி. அதில் 5 முறை இவரை கேப்டனாக அறிவித்தது ஐசிசி.
ஒன்டே கிங்
2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், ஐசிசி சார்பில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வானவர் டோணி.
ஐசிசியின், மக்கள் விருப்ப விருதை 2013ல் டோணி தட்டிச் சென்றார். மக்களின் மனம் கவர்த்த கேப்டன் என்பதற்கு அது அத்தாட்சி.
நாட்டின் கவுரவம்
விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை 2007-08ல் இவர் பெற்றுள்ளார். பிரிட்டனின் டி மோன்ட்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 2012ல் டோணிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது. 2011ல், எல்லை பாதுகாப்பு ராணுவ பிரிவின் சார்பில், கவுரவ பதவி வழங்கப்பட்டது.