மும்பை: விளையாடி களைத்துப்போன அப்பா டோணிக்கு மகள் ஸிவா வாட்டர் பாட்டில் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோணி போட்டிகள் இல்லாத நேரத்தில் அவரது மகளுடன் நேரத்தை செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆல் ஸ்டார்ஸ் எப்.சி என்றழைக்கப்படும் பாலிவுட் நடிகர்களின் கால்பந்து அணியும், ஆல் ஹார்ட்ஸ் எப்.சி என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் கால்பந்து அணியும் நேற்று மும்பை மைதானத்தில் மோதிக் கொண்டன. தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக இப்போட்டி நடத்தப்பட்டது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் டோணியும் ஆடி அசத்தினர்.
கால்பந்து பயிற்சி ஆட்டத்துக்குப் பின் கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவரது மகள் ஸிவா மைதானத்திற்கு வந்து அப்பாவுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மகளுக்கு சமமாக அமர்ந்து டோணியும் தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அண்மையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மழையால் ரத்தானது. இதையடுத்து இரு அணிகளும் சமன் பெற்றதால் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.