சர்வதேச போட்டிகளில் விலகல்
கடந்த உலககோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறிய நிலையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சர்வதேச போட்டிகளில் ஆடுவதை தவிர்த்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
தோனியின் ஆட்டத்தை காண ஏக்கம்
சர்வதேச போட்டிகளில் தோனி விலகியுள்ள நிலையில், அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்பதே உலகெங்கிலும் நிறைந்துள்ள அவரது தீவிர ரசிகர்களின் ஏக்கமாகவும் விருப்பமாகவும் உள்ளது.
வித்தியாசமான கோரிக்கை
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த தோனியின் ரசிகர் பிரணவ் ஜெயின் என்பவர், அவரிடம் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 2005ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் தோனி ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் அடித்துள்ள நிலையில், தோனியிடம் இருந்து 183 ஆட்டோகிராப்களை பெற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ரசிகர் மகிழ்ச்சி
தன்னுடைய இந்த கோரிக்கைக்கு மஹி பாய் ஓகே கூறியதாகவும், ஆனால் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாகவும் பிரணவ் தெரிவித்துள்ளார். இந்த 183 ஆட்டோகிராப்களுக்கு பிறகு மேலும் ஆட்டோகிராப்கள் கிடையாது என்பதே அது.
"கூடிய விரைவில் 183ஐ எட்டுவேன்"
தன்னுடைய கைவசம் இதுவரை 153 ஆட்டோகிராப்கள் உள்ளதாகவும், தன்னுடைய இலக்கை கூடிய விரைவில் அடைந்து விடுவேன் என்றும் பிரணவ் மேலும் குறிப்பிட்டார். தோனியின் ஆட்டோகிராப்பை கிளவுஸ்கள், பேட்கள், போஸ்டர்கள் மற்றும் ஸ்கெட்ச்களில் பிரணவ் பெற்றுள்ளார்.