சிறப்பான பங்களிப்பு
கடந்த உலக கோப்பையையொட்டி குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும் ஸ்பின்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஜடேஜாவின் மறுபிரவேசம் வரையில் இவர்களின் பங்களிப்பு இந்திய அணியில் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் அணியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வாய்ப்பளிக்கப்படாத குல்தீப்
இதனிடையே நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குல்தீப்பிற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய குல்தீப், நியூசிலாந்து பிட்சில் ஸ்பின்னர்களுக்கான தேவையில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது நிர்வாகத்தின் சிறப்பான முடிவுதான் என்றும் கூறியுள்ளார்.
மிஸ் செய்யும் இந்திய அணி
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குல்தீப் யாதவ், விக்கெட் கீப்பிங்கில் தோனியின் அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார். கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் விக்கெட் கீப்பிங்கை சிறப்பாக கையாண்டாலும், அதில் தோனியின் அனுபவம் மிகவும் பெரியது என்றும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
சான்ஸ் கிடைத்தால் சிறப்பாக விளையாடுவோம்
இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஜடேஜா பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங்கில் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் குறிப்பாக பேட்டிங்கில் அவர் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள குல்தீப், வாய்ப்பு வழங்கப்பட்டால் தான் மற்றும் சாஹல் சிறப்பான ஆட்டத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காத்திருக்கும் குல்தீப் யாதவ்
வரும் 12ம் தேதி முதல் துவங்கவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 29ம் தேதி முதல் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக விளையாடுவேன் என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் குல்தீப் தெரிவித்துள்ளார்.