சர்வதேச போட்டிகளில் விலகல்
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் பெற்ற தோல்வியில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் விலகியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல்லில் அவரின் சிறப்பான ஆட்டத்தை பொறுத்து அவர் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா
இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய அணியில் மீண்டும் இணைவதற்கும் ஐபிஎல் தொடருக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரசிகர்களுக்குள் தவறான புரிதல் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணி நிர்வாகமும் நினைக்க வேண்டும்
இந்திய அணியில் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் என்று தோனியும், அவர் இந்திய அணியில் சேர வேண்டும் என்று அணி நிர்வாகமும் நினைத்தால், தோனி மீண்டும் இந்திய அணியில் இணைவது நடக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக தோனி சாதித்திருப்பது மிகவும் அதிகம் என்றும், அவருடைய கேரியரை வெறுமனே ஐபிஎல்லில் வைத்து பார்க்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள்
அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில்தான் ஐபிஎல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் ஆகாஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் நடக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.