கேப்டன்சியில் இருந்து விலகல்
இந்திய அணிக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனி, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். உலகின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த அவரது கேப்டன்சியை கடைசியாக மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
எதிர்பார்ப்பு
அப்போது தான் அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுத்தது பிசிசிஐ. 2017ம் ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த தொடருக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் பயிற்சிகாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய ஏ அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பயிற்சி ஆட்டம்
இதனை கேட்ட ரசிகர்களுக்கு உலகக்கோப்பையை வென்றதை போன்ற மகிழ்ச்சி பொங்கியது. மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் முதல் பயிற்சி ஆட்டம் தொடங்கியது. பொதுவாக பயிற்சி ஆட்டத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இலவச அனுமதி என்றாலும் மைதானம் காலியாக தான் இருக்கும். ஆனால் அன்று தான் ஆச்சரியம் நிகழ்ந்தது.
வாயடைத்த இங்கிலாந்து
தோனியின் கேப்டன்சியை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல இடங்களில் இருந்து அந்த போட்டிக்கு திரண்டனர். மைதானத்தின் வாயிலை திறக்க கூறி வெளியே ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர். அவை திறக்கப்பட்ட பின்னர் ஆட்டத்தின் முதல் 5 ஓவர்களுக்குள் மைதானத்தின் 2 பகுதிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மைதானத்தின் மேற்கு வாயில் கட்டுமான பணிகளுக்காக மூடி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ரசிகர்கள் அலைமோதியதால் திறக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.
கௌரவம்
ஆட்டத்தின் 10 ஓவருக்குள் மைதானம் நிரம்பி வழிந்தது. ஒரு பயிற்சி ஆட்டத்தை சுமார் 15,000 ரசிகர்கள் நேரில் கண்ட வரலாற்று நிகழ்வு அன்று நடந்தது. இதனை மைதானத்தில் பார்த்த இங்கிலாந்து வீரர்கள் ஆச்சரியத்தில் ஆடிப்போயினர். தோனி என்ற ஒரே ஒரு வீரருக்காக ஒரு மைதானமே நிறைந்துவிட்டதா? என வாயடைத்து நின்றனர். குறிப்பாக தோனி பேட்டிங்கிற்கு களமிறங்கும் போது எழுந்த சத்தம் அரங்கத்தை அதிரவைத்தது. இந்திய கிரிக்கெட்டில் வெகு சிலருக்கே கிடைத்த கெளரவம் இது, வரலாற்றில் எழுதி வையுங்கள் என முன்னாள் வீரர்கள் பெருமைப்பட்டனர். அத்தகைய தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.