சர்வதேச போட்டிகளில் விலகல்
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. அதுமுதல் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரது வரவை எதிர்நோக்கியுள்ள சர்வதேச அளவிலான அவரது ரசிகர்களுக்கு அவர் பதில் ஒன்றும் கூறாமல் காத்திருக்க வைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்
இதனிடையே சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் எதிர்வரவுள்ள ஐபிஎல் 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் களமிறங்கவுள்ளார். இந்திய அணிக்காக அவர் விளையாடினாலும் இல்லாவிட்டாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் நீடிப்பார் என்று அந்த அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
'தல' தோனியின் ரசிகர்கள்
கிரிக்கெட்டில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் தல தோனி. இவர் மற்றும் இவரது மனைவி சாக்ஷி சிங் தோனி ஆகியோர் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாக டிரெண்டிங் ஆகி லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும்.
|
முன்னாள் வீரர்களுக்காக தயாரிப்பு
இதனிடையே மாலத்தீவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, முன்னாள் வீரர்கள் ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்காக பானிப்பூரி தயார் செய்து கொடுத்த வீடியோ அவரது ரசிகர் ஒருவரால் டிவிட்டரில் பகிரப்பட்டு, ஏராளமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பாரம்பரியமான சாலையோர உணவான பானிப்பூரியை அதன், தயாரிப்பு மாறாமல் செய்து கொடுக்கிறார் தோனி.
ரசிகர்கள் பாராட்டு
இந்த வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் போஸ்ட் செய்துள்ளனர். பன்முகத் திறமை வாய்ந்தவர் தோனி என்றும் இந்த உலகிலேயே எனக்கு பிடித்த இரண்டு விஷயங்கள் மஹி மற்றும் பானிப்பூரி என்றும் தற்போது பானிப்பூரியை கொடுக்கும் மஹி, ஐபிஎல்லில் எதிரணி பௌலர்களுக்கு சிக்சர்களை அள்ளி கொடுப்பார் என்றும் பல்வேறு கமெண்டுகள் டிவிட்டர் பக்கத்தில் அளிக்கப்பட்டு வருகின்றன.