8 மாதங்களாக விளையாடாத தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்றதிலிருந்து இதுவரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். மேலும் கிரிக்கெட்டில் தன்னுடைய எதிர்காலம் குறித்தும் வாய் திறக்காமல் உள்ளார். இதனால் பல்வேறு யூகங்கள் அவர்குறித்து நிலவிவருகிறது.
ஐபிஎல்லில் பங்கேற்கும் தோனி
மார்ச் 29ம் தேதி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் துவங்கவுள்ளது. இந்நிலையில், தோனியின் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதலாக ஐபிஎல் தொடரில் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்று ஆடவுள்ளார். 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனியின் சிறப்பான ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நடப்பு சாம்பியனுடன் மோதல்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. இந்நிலையில், வரும் 29ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது. தோனியின் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக, முதல் நாளின் முதல் போட்டியிலேயே தோனி விளையாட உள்ளார்.
சென்னை வரும் 'தல'
ஐபிஎல் தொடருக்காக அதன் அணிகள் தயாராகி வருகின்றது. தங்களுடைய அணிக்கு தேவையான வீரர்களை கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் எடுத்த அணிகள், தற்போது, தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிலையில் வரும் 2ம் தேதி எம்எஸ் தோனி சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அணியின் சிஇஓ கேஎஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே வீரர்கள் பங்கேற்பு
மார்ச் 2ம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் துவங்கவுள்ள பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கு எம்.எஸ் தோனியுடன் அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் பங்கேற்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் அணியின் முழுமையான பயிற்சி அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கவுள்ளதாகவும், அதில் சிஎஸ்கேவின் அனைத்து வீரர்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆர்வம்
கடந்த இரு ஆண்டுகளாக சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களின்போது, தோனி உள்ளிட்டோரை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில், பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாகவே தோனி, பயிற்சியில் ஈடுபட உள்ள நிலையில், இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.