இங்கிலாந்து -இந்தியா தொடர்
கடந்த 2008ல் இங்கிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் ஆர்பி சிங்கிற்கு பதிலாக இர்பான் பதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அப்போது, ஆர்பி சிங்கையே தேர்வு செய்ய தோனி விரும்பியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார் தோனி.
ஆர்பி சிங் கருத்து
இந்நிலையில் வீரர்கள் தேர்வில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி நடுநிலையாக செயல்பட்டவர் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்பி சிங், முன்னதாக இந்தூரில் நடைபெற்ற போட்டிகளில் தான் விக்கெட் எடுக்காததால் தான் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அதுகுறித்து தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிக்கு திருப்பி அனுப்பப்பட்டேன்
கடந்த 2011 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத முன்னாள் வீரர் ஆர்பி சிங், தற்போது ஸ்போர்ட்ஸ் டாக்கிற்காக தன்னுடைய மனதை திறந்து பேட்டியளித்துள்ளார். இந்திய அணியில் ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடாத பல வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் கிடைத்தநிலையில், தான் ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாட திரும்பி அனுப்பப்படுவேன் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆர்பி சிங் மகிழ்ச்சி
ஆயினும் அணியின் தேர்வுகள் குறித்த தோனியின் முடிவுகள் தங்களுடைய நட்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை என்று கூறியுள்ள ஆர்பி சிங், தன்னுடைய விளையாட்டை மேம்படுத்துவது குறித்து தாங்கள் அடிககடி பேசுவோம் என்றும், நட்பையும் ஆட்டத்தையும் தாங்கள் ஒன்றாக நினைத்தது இல்லை என்றும் கூறியுள்ளார். தோனிக்கு இயல்பாகவே போட்டிகள் குறித்த அறிவும், எத்தகைய முடிவுகள் அணியை பலப்படுத்தும் என்பதும் தெரிந்திருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.