20ம் தேதி வீரர்கள் பயணம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள நிலையில், அடுத்த மாதம் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி 8 அணி வீரர்களும் வரும் 20ம் தேதியையொட்டி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிஎஸ்கே அணியும் வரும் 21ம் தேதி தங்களது பயணத்தை துவக்கவுள்ளனர்.
சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்பு
முன்னதாக வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதிவரை சென்னை சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயிற்சியில் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 15 பேர் பங்கேற்கவுள்ளனர். தற்போது ராஞ்சியில் உள்ள உள் மைதானத்தில் தன்னுடைய பயிற்சியை தோனி துவக்கியுள்ளார்.
பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவார்
இந்நிலையில், தோனியின் இந்த பயிற்சி குறித்து கேள்வியுற்றதாகவும், ஆனால் தாங்கள் அவர்குறித்து எப்போதும் கவலை கொண்டதில்லை என்றும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தோனி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து தன்னையும் அணியையும் சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்றும் அவர் கூறினார்.
தோனி விளையாடுவார் -சிஎஸ்கே
வரும் 2021 மற்றும் 2022 ஆகிய ஐபிஎல் சீசன்களிலும் சிஎஸ்கே அணியில் பங்கேற்று தோனி விளையாடுவார் என்றும் காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள எம்எஸ் தோனி, தற்போது யூஏஇயில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நிலையில், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.