ரசிகர்கள் ஆர்வம்
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவரது போட்டிகளை காண தமிழ்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெப் சீரீஸ் தயாரிக்கும் தோனி
தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, அடுத்ததாக என்ன செய்வார், தன்னுடைய எதிர்காலத்தை எந்த துறையில் நகர்த்துவார் என்பது உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் கிரிக்கெட் சார்ந்த துறைகளில் மட்டுமே செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் வெப் சீரீசை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்குமெண்டரி சீரீஸ்
கடந்த ஆண்டில் 'ரோர் ஆப் தி லயன்' என்ற பெயரில் தனது முதல் தயாரிப்பை அதாவது டாக்குமெண்டரி சீரிசை தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. சிஎஸ்கே நிறுவனத்தின் ஸ்பாட் பிக்சிங், இரண்டு ஆண்டு தடை, தோனியின் தலைமை உள்ளிட்டவை குறித்து அதில் விளக்கப்பட்டிருந்தது.
வெப் சீரீஸ் தயாரிக்கும் தோனி
இந்நிலையில் தற்போது புராண சயின்ஸ் பிக்ஷன் வெப் சீரீசை தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தில் மேனேஜிங் இயக்குநர் சாக்ஷி தோனி, ஒரு அகோரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாக்ஷி தோனி உறுதி
இந்த சீரீசில் நடிக்கவுள்ள நடிகர்கள், லோகேஷன் போன்றவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் சாக்ஷி குறிப்பிட்டுள்ளார். புதிய எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள இந்த தொடரில் சாகசங்களுக்கு குறைவிருக்காது என்றும் சாக்ஷி தெரிவித்துள்ளார்.