மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்எஸ் தோனியின்கீழ் இணைந்து விளையாடி வருகிறார் மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ. ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இதுவரை 3 கோப்பைகளை கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் வெற்றிகளின்போது தோனியுடன் இருந்தவர் பிராவோ. மேலும் தோனிக்கு மிகவும் விருப்பமான ஆல்-ரவுண்டர் இவர்.
சிபிஎல்லில் ஆடிவரும் பிராவோ
தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் பிராவோ, அதை முடித்துக் கொண்டு அடுத்த மாதத்தில்தான் சிஎஸ்கே அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி எந்த சூழ்நிலையிலும் பதற்றமே அடைய மாட்டார் என்று பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தோனி
அணியில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் தோனி அதை அமைதியாக எதிர்கொள்வார் என்றும் பிராவோ கூறினார். மேலும் தன்னுடைய அணி வீரர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்றும் ஒரு சிறந்த கேப்டனின் முக்கிய குணமாக இது இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து அணியிலும் சிறப்பான வீரர்கள்
அனைத்து ஐபிஎல் அணிகளிலும் சிறப்பான வீரர்கள் உள்ளதால், அவர்கள் அனைவரும் யூஏஇயின் ஸ்லோ பிட்ச்க்கு தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று கூறிய பிராவோ, சிஎஸ்கேவிற்கு மட்டும் சாதகமாக இந்த பிட்ச்கள் இருக்கும் என்று கூற முடியாது என்றும் கூறியுள்ளார். கீரன் பொல்லார்ட் மற்றும் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகிய சக வீரர்களுக்கு பௌலிங் போடுவது கடினமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.