ரவி சாஸ்திரி என்ட்ரி
அதன் பிறகு, பயிற்சியாளர் தேர்வுக்கு கும்ப்ளே மீண்டும் விண்ணப்பித்திருந்தார். வீரேந்தர் ஷேவாக் உள்ளிட்ட பலரும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், வாய்ப்பு கிடைத்தது என்னவோ, ரவி சாஸ்திரிக்கு தான். விராட் கோலிக்கு மிக நெருக்கமாக இருந்தவர் ரவி சாஸ்திரி. ஆகையால், அதிரடி புயல் ஷேவாக்கிற்கு கூட வாயப்பு தராமல் ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் அந்தஸ்தை கொடுத்தது பிசிசிஐ. அதன் பிறகு இந்திய அணி, அவ்வப்போது சில கோப்பைகளை வெல்வதும், இழப்பதும் பேலன்ஸாக நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை அடுத்தடுத்து டெஸ்ட் கோப்பைகளை வென்றது ரவி சாஸ்திரி தலைமைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் எனலாம். ஆனால், 2019 உலகக் கோப்பைத் தொடர் கை நழுவிப் போனது.
மனம் திறந்து பேட்டி
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து மனம் திறந்துள்ளார். கிரிக்கெட்.காம் சார்பாக அவரிடம், "ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி போன்ற ஆளுமையான நபர்களுக்கு முன்னால் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது போன்ற கருத்து நிலவுகிறதே?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
நியாயத்தை ஏற்பார்கள்
இதற்கு பதிலளித்த பிரசாத், "நாங்கள் என்ன மாதிரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் என்று நீங்கள் அவர்களிடம் கேளுங்கள். சில நேரங்களில், நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்க கூட விரும்பமாட்டோம். ஆனால் அவர்களின் ப்ளஸ் என்னவென்றால், மறுநாள் காலையில் நாங்கள் மீண்டும் சந்திக்கும் போது, நான் எடுத்த முடிவில் இருக்கும் நியாயத்தை அவர்கள் அங்கீகரித்து ஒப்புக்கொள்வார்கள்.
அடிபணியவில்லை
நாங்கள் எப்படி சூடான விவாதங்களை மேற்கொண்டோம் என்று விராட் மற்றும் ரவி அதைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள். எங்களுக்குள் வேறுபாடுகள் இல்லாததால், நாங்கள் அவர்களுக்கு அடிபணிந்தோம் என்று அர்த்தமல்ல. பல பிரச்சனைகளில் நாங்கள் அவர்களை எவ்வாறு ஒப்புக் கொள்ள வைத்தோம் என்பது யாருக்குத் தெரியும்" என்று அவர் முடித்தார்.