பும்ரா தேர்வு குறித்து மனம்திறந்த பிரசாத்
இன்னும் சில வாரங்களில் தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள இந்திய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ராவின் தேர்வு குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
பல முக்கிய முடிவுகள்
கூடிய விரைவில் பணி ஓய்வு பெறவுள்ள எம்எஸ்கே பிரசாத் தன்னுடைய பணிக்காலத்தில் தன்னுடைய தலைமையிலான குழுவினர் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று பும்ராவை டெஸ்ட் போட்டிகளுக்காக தேர்வு செய்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் கருத்து
குறைந்த ஓவர்களை கொண்ட போட்டிகளில் மட்டுமே சிறந்து விளங்கிய ஜஸ்பிரீத் பும்ரா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாட சரியாக இருக்க மாட்டார் என்றே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அதை மீறி தங்களது குழு நீண்ட நடைமுறையில் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் பிரசாத் கூறியுள்ளார்.
12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகள்
தன்னுடைய 11வது டெஸ்ட் போட்டியிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை பும்ராவிற்கு கிடைத்துள்ளது. அவர் தற்போது 12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய சாதனையை தொடர்ந்து வருகிறார்.
பும்ரா தேர்வு குறித்து பிரசாத்
கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய பும்ரா, அதற்கு முன்னதாக, குறைந்த ஓவர் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு ரஞ்சி போட்டிகளை விளையாட செய்து அதைக் கொண்டு அவரை டெஸ்ட் போட்டிகளுக்காக தேர்வு செய்ததாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பும்ரா போலவே நடைமுறை
பும்ராவை போலவே டி20 போட்டிகளில் விளையாடிவந்த ஹர்திக் பாண்டியாவும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாட சரிபட்டு வரமாட்டார் என்று அனைத்து தரப்பினரும் கூறிய நிலையில், அவரையும் டெஸ்ட் போட்டிகளுக்காக நீண்ட நடைமுறையில் தேர்வு செய்ததையும் பிரசாத் நினைவு கூர்ந்தார்.