கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிலையும் இதுதான். அவர்கள் பிசிசிஐ கண்காணிப்பிலும் உள்ளனர்.
லாக்டவுன் விதிகள்
துவக்கத்தில் இந்தியாவில் லாக்டவுன் விதிகளின்படி விளையாட்டுப் பயிற்சிகள் செய்ய தடை இருந்தது. அதனால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளுக்குள் சிறிய அளவில் உடற்பயிற்சி மட்டுமே மேற்கொண்டு வந்தனர். முழு அளவில் பயிற்சி செய்ய முடியாத நிலை இருந்தது.
பிசிசிஐ திட்டம்
மீண்டும் சில மாதங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகளை துவக்க திட்டமிட்ட பிசிசிஐ வீரர்களை அதற்காக பல கட்டமாக தயார் செய்ய முடிவு செய்தது. சில மாதங்கள் கழிந்த பின்னரே மைதானத்தில் பயிற்சிகளை துவக்க திட்டமிட்டு இருந்தது.
பாதுகாப்பு அவசியம்
இதற்கிடையே, நான்காவது லாக்டவுனின் போது விளையாட்டு வீரர்கள் மூடப்பட்ட இடங்களில் தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும், பிசிசிஐ வீரர்களை மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதிக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பு தான் அவசியம் என்பதில் உறுதியாக இருந்தது.
ஷர்துல் தாக்குர் பயிற்சி
இந்த நிலையில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஷர்துல் தாக்குர் சில நாட்கள் முன்பு மகாராஷ்ட்ராவில் உள்ள தன் சொந்த மாவட்டமான பால்கர்-இல் மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். அது பெரிய செய்தியானது. அவரைத் தொடர்ந்து மற்ற கிரிக்கெட் வீரர்களும் பயிற்சி செய்யத் துவங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பிசிசிஐ விரும்பவில்லை
இந்த நிலையில், பிசிசிஐ அனுமதி பெறாமல் தான் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும், பிசிசிஐ அவர் அனுமதியின்றி வெளியே சென்று பயிற்சிசெய்ததை விரும்பவில்லை என்ற தகவலும் கிடைத்தது.
மும்பை கிரிக்கெட் அமைப்பு
தற்போது மும்பை வீரரான ஷர்துல் தாக்குரிடம் அவர் அனுமதியின்றி பயிற்சி மேற்கொண்டது பற்றி விளக்கம் கேட்டுள்ளது மும்பை கிரிக்கெட் அமைப்பு. அவருடன் மேலும் மூன்று வீரர்கள் மைதானங்களில் பயிற்சி செய்துள்ளனர்.
நடவடிக்கை
அனுமதியின்றி பயிற்சி செய்த நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க மும்பை கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிசிசிஐ-யும் தனிப்பட்ட முறையில் ஷர்துல் தாக்குரிடம் விசாரணை செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.