காப்பாற்றிய ரன் ரேட்
அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும், துபாயில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் மோதி வருகின்றன. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றில் நுழைய 4-வது அணிக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இருந்தன. நேற்றைய போட்டி முடிவில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. போட்டியில் மீதமிருந்தது கொல்கத்தாவும், மும்பையும் தான். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது எனலாம்.14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.587 ஆக உள்ளது.
ஏமாற்றம்
நடப்பு சாம்பியனான மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்பதே கிரிக்கெட் எக்ஸ்பெர்ட்ஸ்களின் கணிப்பாக இருந்தது. அதை மும்பை இப்போது நிரூபித்துள்ளது. எனினும், முதலில் பேட்டிங் செய்த மும்பை, உண்மையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து மும்பை ஒவ்வொரு பந்துகளையும் விளாசியது. குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், சன் ரைசர்ஸ் பவுலர்களை பாரபட்சம் பார்க்காமல் விளாசித் தள்ளியிருக்கிறார். கேப்டன் ரோஹித் ஷர்மா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டாக, மறுப்பக்கம் எதைப்பற்றியும் கவலைப்படாத இஷான் கிஷன், 16 பந்துகளில் அரைசதம் விளாசி மிரள வைத்தார். மும்பை அணியில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இதுவேயாகும். இதற்கு முன்னர் இஷான் கிஷன், பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே, மும்பை அணியின் அதிவேக அரைசதமாகும். அதனை அவரே இப்போது முறியடித்திருக்கிறார். 10 ஓவர்களுக்கெல்லாம் 130 ரன்கள் குவித்துவிட்டது மும்பை அணி. எனினும், அவர் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் ஓவரில் கேட்ச்சானார். இதில், 11 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும், பொல்லார்ட் 13 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
வெளியேறியது மும்பை
எனினும், இறுதிக் கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ், 40 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில், 13 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில், மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். மும்பை 235 ரன்கள் அடித்ததால், பிளே ஆஃப் செல்ல வேண்டுமெனில், ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கியிருக்க வேண்டும். ஆனால், அருமையான அபுதாபி பிட்சில், ஹைதராபாத் தொடக்கம் முதலே விளாசி வருகிறது. இதனால், அந்த அணி எந்தவித சிரமும் இன்றி 65 ரன்களை கடக்க, அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் 2021 தொடரை விட்டு வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்.
14 புள்ளிகளுடன்
அதேசமயம், அதிகாரப்பூர்வமாக நான்காவது அணியாக 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர்ந்து இரு சீசன்களாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இம்முறை பிளே ஆஃப் முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது. அதேசமயம், பல தொடர்களாக பிளே ஆஃப் முன்னேற முடியாமல் தவித்து வந்த கொல்கத்தா, இம்முறை தனது கனவை நிறைவேற்றியுள்ளது. ஆனால், ஒன்று.. உண்மையில் மும்பை இந்த போட்டியில் மிரட்டிவிட்டது. ஒருவேளை, ரன் ரேட் அடிப்படையில் 60 - 70 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிப் பெற்றாக வேண்டும் என்று நிலைமை இருந்திருந்தால், நிச்சயம் ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளியிருக்கும்.