மும்பை: ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில், டாஸ்வென்ற மும்பை அணி பேட் செய்தது. முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்களான டி காக் 29 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடினர். மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களான டு பிளசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், வாட்சன் நிலைத்துநின்றார். சுரேஷ் ரெய்னா 8 ரன்னிலும், ராயுடு ஒரு ரன் மற்றும் தோனி 2 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
பிராவோ 15 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, வாட்சன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மலிங்கா வீசிய பந்தில் தாக்கூர் அவுட்டானார். இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றிபெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
📹: 🚎 CH4MPIONS ARE 🏠 💙#OneFamily #CricketMeriJaan #MumbaiIndians pic.twitter.com/CrtcXS4M1P
— Mumbai Indians (@mipaltan) May 13, 2019
இந்நிலையில், ஹதராபாத்தில் இருந்து மும்பை வந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையின் முக்கிய சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர்.
கூட்டத்துக்கு நடுவே கோப்பையுடன் திறந்த பேருந்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், வெற்றி வீரர்களை நோக்கி உற்சாக முழக்கமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.