நாளை மறுதினம் துவக்கம்
ஐபிஎல் 2020 தொடர் நாளை மறுநாள் முதல் துவங்கி 53 நாட்கள் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையில் நாளை மறுதினம் அபுதாபியில் துவங்கவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இந்த தொடர் துவங்கவுள்ளது.
டிரெண்ட் போல்ட்டின் சிறப்பான வரவு
இந்நிலையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் சிஎஸ்கேவின் பலவீனம் குறித்து முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ராவுடன் தற்போது இணைந்துள்ள நியூசிலாந்து பௌலர் ட்ரெண்ட் போல்ட்டின் வரவு அந்த அணிக்கு சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
ஆட்டத்தை காண ஆவல்
அணியின் முக்கிய பௌலர் லசித் மலிங்கா சொந்த காரணங்களால் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இந்த இரு பௌலர்களின் கூட்டணியை எதிர்கொள்ள சிஎஸ்கே மிகுந்த பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார். பும்ரா மற்றும் போல்ட் இருவரும் உலக தரத்திலான பௌலர்கள் என்பதால் அவர்களின் ஆட்டத்தை காண தான் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
துவக்க ஆட்டக்காரர் குறித்து கேள்வி
இந்நிலையில் சிஎஸ்கேவின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா அணியிலிருந்து விலகியுள்ளதால் அந்த அணிக்கு மிகபெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது 3வது இடம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் ஷேன் வாட்சனுடன் துவக்கத்தில் களமிறங்கவுள்ள வீரர் குறித்தும் கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.