கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடரின் அணி வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்து அறிவித்தது. பாதியிலேயே தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் இழப்பிற்கு பிசிசிஐ உள்ளாகியுள்ளது.
நாடு திரும்பும் வீரர்கள்
ஆயினும் இந்த நேரத்தில் வெளிநாட்டு வீரர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் இங்கிலாந்து வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அங்கு தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு தங்களது வீடுகளுக்கு செல்வார்கள்.
பல்வேறு நாடுகள்
இதையடுத்து ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் அடுத்தடுத்து தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் முடிவு
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை தன்னுடைய சொந்த சார்ட்டர் விமானத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த விமானத்தில் மற்ற அணிகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களையும் இணைய அழைப்பு விடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் செயல்
வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைப்பது பிசிசிஐயின் வேலை என்று இருக்காமல் தங்களது அணி வீரர்களுக்கு பொறுப்பேற்று அவர்களை சொந்த விமானத்தில் அனுப்பி வைக்கும் மும்பை இந்தியன்சின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.