மும்பை: இந்திய அணியில் சமீப காலமாக நிலவும் குழப்பங்கள், சிக்கல்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. விராட் கோலி ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தும், அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்.
இங்கிலாந்து மண்ணில் இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரை பரிசளித்த விராட் கோலிக்கு, அதன் பிறகு நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தும் அவர் விரும்பத்தகாதவை தான்.
ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்க, திடீரென "டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போகிறேன்" என்று தடாலடியாக அறிவித்தார் கோலி. இதனை உண்மையில் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், "கோலி கேப்டன் இல்லையா?.. அப்போ இந்திய அணியின் நிலை என்ன ஆவது?" என்று யாரும் அதிர்ச்சி அடையவும் இல்லை. ஏனெனில், கோலி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை இதுவரை வெல்லவில்லை. ஆகையால் தனிப்பட்ட முறையில் அவரது சாதனை மெச்சப்பட்டாலும், இரு தரப்பு கிரிக்கெட் தொடர் போன்றவற்றில் இந்திய அணி கோப்பைகளை வென்றாலும், மிக முக்கிய டிராஃபிகளை வெல்ல முடியவில்லையே என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. இதனால், கோலியின் பதவி விலகல் முடிவுக்கு பெரிதாக எந்த ரியாக்ஷனும் இல்லை. ரசிகர்களும் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு மும்முரமாக பதில் தேடத் துவங்கிவிட்டனர்.
அதன் பிறகு வெளியான ஒரு செய்தி ரசிகர்களை சற்றே அதிர்ச்சி அடைய வைத்தது. அதாவது, இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு இருந்து வருகிறார். இந்த நிலையில், ரோஹித்தை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என விராட் கோலி விரும்பியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ரோகித் ஷர்மாவுக்கு வயது அதிகமாகி விட்டதால் அந்த பொறுப்பிலிருந்து விலக்க வேண்டும் என விராட் கோலி அணித் தேர்வாளர்களிடம் சொன்னதாக தகவல் கசிந்தது. ஒருநாள் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்குத் துணை கேப்டனாகவும், ரிஷப் பண்ட் டி20 அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கோலி தேர்வாளர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்பட்டது.
இந்த தகவல் வெளியான அடுத்த சில நாட்களிலேயே, ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து இந்த சீசனோடு விலகுகிறேன் என்று மீண்டும் கோலி ஒரு அதிர்ச்சிகர அறிக்கையை வெளியிட்டார். "இது தான் ஆர்சிபி கேப்டனாக எனது கடைசி சீரிஸ்" கோலி சொன்னது ரசிகர்களை சற்றே கலங்கச் செய்தது. அவர் இந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், ஆர்சிபி வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைய, கோலி இந்த சீசன் முடிவதற்குள்ளாகவே மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
சிக்கல்களும், சரிவுகளும் இப்படி விராட் கோலியை சுற்றி சுற்றி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அணியில் நிலவும் மும்பை லாபி காரணமாகவே கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கோலி - ரோஹித் நல்ல நண்பர்கள் என்றாலும், அணியில் இருவருக்குள்ளும் பெருமளவில் ஈகோ மோதல் இருந்ததாகவே கூறப்படுகிறது. இப்போதும் அது இருப்பதாகவும் தெரிகிறது. இளம் வயதிலேயே 70 சதங்கள் வரை குவித்து இந்திய அணியின் அசைக்க முடியாத ஆளுமையாக விராட் கோலி வலம் வந்ததால், மும்பையைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா இந்திய அணியின் "லீடிங்" பொசிஷனுக்கு வர முடியாமல் இருந்தார்.
இத்தனைக்கும் ஐபிஎல் தொடரில் 5 முறை மும்பை அணிக்கு கோப்பை வென்றுக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இந்திய அணிக்கும் கோப்பை வென்றுக் கொடுத்து, உலகின் எப்பேர்ப்பட்ட பவுலராக இருந்தாலும் விட்டு விளாசும் எபிலிட்டி என தனக்கு இத்தனை தகுதிகள் இருந்து கேப்டன்ஷிப் எனும் தலைமை பதவி கிடைக்காத ஆதங்கம் ஹெவியாக இருந்ததாகவே தெரிகிறது. இந்த சூழலில், கடைசி 2 வருடங்களாக விராட் கோலியால் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த முடியவில்லை. 2 வருடங்களாக அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. தவிர, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு ஒரு முறை கூட கோப்பையும் வென்றுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில், கோலி தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்த இந்திய அணி, பிறகு ரஹானே தலைமையில் சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றியது.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
விராட் கோலியைச் சுற்றி இத்தனை மைனஸ் இருந்தும், அவர் இன்னமும் இந்திய அணியின் கேப்டனாக நீடிப்பதை விரும்பாத ரோஹித் தந்த மறைமுக அழுத்தம் காரணமாகவே விராட் கோலி பதவி விலகும் முடிவை எடுத்ததாக தெரிகிறது. அணியின் கோச் ரவி சாஸ்திரியும் மும்பை அணிக்காக ஆடிய வீரர் தான். இதனால், இந்த விவகாரத்தை ரவி சாஸ்திரி மூலம் நகர்த்திய ரோஹித், விராட் கோலியை இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்தும் விலக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ரவி சாஸ்திரி இதுகுறித்து தொடர்ந்து விராட் கோலியிடம் பேசி வந்த நிலையில், கடும் பிரஷர் காரணமாகவே டி20 கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தனது ஆதிக்கத்தை குறைத்துக் கொள்ள கோலி முடிவு செய்திருக்கிறார். எனினும், கோலி தனது திறமை மீது நம்பிக்கை கொண்டிருப்பதால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சக்தி வாய்ந்த கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதும் தெளிவாகிறது. ஒரு 'மும்பைகர்' ரோஹித் அல்ல.. 10 'மும்பைக்கர்' ரோஹித் வந்தாலும், எனது திறமைக்கு ஈடாக முடியாது என்பதே கோலியான திண்ணமான எண்ணமாக உள்ளது.