குஜராத் மாநில அணி
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பரோடா மாநில கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் அணிகளில் சேர முடியும். பரோடா அணியில் ஆடிய பின்பு தான் பாண்ட்யா சகோதரர்களான, ஹர்திக், க்ருனால் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பல்வேறு புகார்கள்
பரோடா அணியில் குறிப்பிட்ட தனியார் கிரிக்கெட் அகாடமிகளின் வீரர்களை மட்டும் தேர்வு செய்வது, அணித் தேர்வை விற்பனை ஆக்கியது என பல்வேறு புகார்கள் கடந்த காலங்களில் எழுந்துள்ளது. அதனால், பரோடா கிரிக்கெட் அமைப்பின் பெயர் மோசமான நிலையில் உள்ளது.
ஏமாற்று வேலை
இந்த நிலையில் பரோடா அண்டர் 16 அணியில் இடம் பெற வேண்டி குஜராத் அல்லாத வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர் ஒருவர் ஏமாற்று வேலை செய்துள்ளது தெரிய வந்து இருக்கிறது. அவரது பின்னணியில் முன்னாள் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முனாப் படேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சிவம் பரத்வாஜ்
குஜராத்தை சொந்த மாநிலமாக கொண்டிராத சிவம் பரத்வாஜ் என்ற வீரர் பரோடா மாநில அண்டர் 16 அணியில் சேர விரும்பி உள்ளார். அதற்காக முயற்சி செய்து அணிக்குள் இடம் பெற்றும் விட்டார். பின்னர் அவர் வயது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
பள்ளிக்கு போன்
இதை அடுத்து சிவம் பரத்வாஜ் வயதை கண்டுபிடிக்க அவர் அணியில் சேர்ந்த போது அளித்த ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை சரி பார்த்துள்ளனர். அந்த பள்ளிக்கு போன் செய்து பேசி உள்ளனர். அப்போது இன்னும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின.
எல்லாமே போலி
சிவம் பரத்வாஜ் என்ற ஒருவர் தங்கள் பள்ளியில் படிக்கவே இல்லை என கூறி உள்ளனர். அடுத்து அவர் அளித்த ஆதார் கார்டை சரி பார்த்த போதும் அதுவும் போலி என தெரிய வந்தது. இதில் வயதை குறைத்துக் காட்டியது மட்டுமில்லாமல் போலி சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.
முனாப் படேல்
அதன் பின் தான் விசாரணை செய்ததில் அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் முனாப் படேல் பெயர் அடிபட்டுள்ளது. அதை எப்படி கண்டுபிடித்தார்கள்?
சொந்த ஊர் தொடர்பு
முனாப் படேலின் சொந்த ஊர் இக்கார். அதே ஊரின் பெயரை சிவம் பரத்வாஜ் தன் போலி சான்றிதழ்களில் குறிப்பிட்டு இருக்கிறார். அதை வைத்து தான் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து அதை ஓரளவு உறுதி செய்துள்ளனர்.
கிரிமினல் குற்றம்
இந்தியாவில் மாநில அளவிலான கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் பலரும் தங்கள் வயதை குறைத்துக் காட்டி ஏமாற்றி உள்ளனர். ஆனால், சிவம் பரத்வாஜ் அனைத்து சான்றிதழ்களையும் போலியாக தயாரித்துள்ளார். இது கிரிமினல் குற்றம் ஆகும்.
புகார் அளிக்கப்படுமா?
முனாப் படேல் மற்றும் சிவம் பரத்வாஜ் மீது காவல்துறை புகார் அளிக்கப்படுமா? என தெரியவில்லை. ஜூலை 23 அன்று பரோடா கிரிக்கெட் அமைப்பு போர்டு மீட்டிங் நடத்த உள்ளது. அதில் தான் இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.