முரளி விஜய் பொறுமை
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸில் முரளி விஜய் ஆடவில்லை. இரண்டாம் இன்னிங்க்ஸில் வாய்ப்பு பெற்ற அவர் 52 ரன்கள் எடுக்கும் வரை பொறுமையாக ஆடினார்.
அதிரடி காட்டினார்
அடுத்து 52இல் இருந்து சதம் அடிக்க வெறும் 27 பந்துகளே எடுத்துக் கொண்டார் முரளி விஜய். இடையே ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து அதகளம் செய்தார். இந்த பயிற்சிப் போட்டியில் 132 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ப்ரித்வி ஷா இல்லை
ப்ரித்வி ஷா இந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துவக்க வீரராக இடம் பிடிக்க ராகுல், முரளி விஜய், ரோஹித் சர்மா இடையே போட்டி இருந்தது. எந்த இரு வீரர்கள் அணிக்கு துவக்கம் அளிப்பார்கள் என்ற குழப்பம் இருந்தது.
துவக்க வீரர்களாக முரளி விஜய், ராகுல்
ராகுல் முதல் இன்னிங்க்ஸில் 3 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து டெஸ்ட் அணியில் அவரது இடம் சந்தேகத்தில் இருந்தது. எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்க வீரர்களாக களம் இறங்கிய முரளி விஜய், ராகுல் இருவரும் ரன் அடித்து தங்கள் பார்மை நிரூபிப்பதில் குறியாக இருந்தனர். அப்போது தான் அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் ஆடினர்.
முரளி விஜய் உறுதி
ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். ராகுல் அரைசதம் அடித்த நிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மறுமுனையில் ஆடி வந்த முரளி விஜய் அதிரடியை கையில் எடுத்து சதம் அடித்தார். இதன் மூலம் முரளி விஜய் அணியில் தன் இடத்தை கிட்டதட்ட உறுதியாக்கி விட்டார்.
ரோஹித் நிலை?
ராகுலும் அனேகமாக முதல் போட்டியில் வாய்ப்பு பெற்று விடுவார் என்றே தெரிகிறது. ரோஹித் சர்மாவின் வாய்ப்பு தான் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை ராகுல், முரளி விஜய் அணியில் இடம் பிடித்து விட்டால் ரோஹித் மிடில்-ஆர்டரில் ஆடுவார்.