90ஸ் கிட்ஸ்
90ஸ் கிட்ஸ்-இன் ஆதர்ச கிரிக்கெட் நாயகர்கள் அனைவரும் ஒன்று கூடி மோதும் கிரிக்கெட் போட்டி தான் இந்த லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர். மும்பையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெறும் இந்த தொடரில் ஐந்து நாடுகள் பங்கேற்றுள்ளன.
ஐந்து நாடுகள்
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா என ஐந்து நாடுகளை சேர்ந்த பல ஜாம்பவான் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர். இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியையும், இலங்கை, ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி உள்ளது.
முக்கிய வீரர்கள்
அடுத்து இந்தியா - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான், இர்பான் பதான் என பல முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
இலங்கை வீரர்கள்
இலங்கை அணியில் ஜாம்பவான்களான குமார் சங்ககாரா, மகிளா ஜெயவர்தனே உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவில்லை. எனினும், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் உள்ளிட்ட சிறந்த இலங்கை பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் பங்கேற்று இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
2011 உலகக்கோப்பை இறுதி
2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆடிய சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் ஆகியோரும், இலங்கை அணியில் ஆடிய முத்தையா முரளிதரன், திலகரத்னே தில்ஷன் உள்ளிட்ட வீரர்களும் எதிர்த்து ஆடுவதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முரளிதரன் இல்லை
ஆனால், போட்டிக்கு முன் இலங்கை அணியின் கேப்டன் திலகரத்னே தில்ஷன், முத்தையா முரளிதரன் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என அறிவித்தார். எனினும், வேகப் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் இடம் பெற்றார்.
ரசிகர்கள் ஏமாற்றம்
உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சினும், சிறந்த சுழற் பந்துவீச்சாளராக முரளிதரனும் ஒரே காலத்தில் வலம் வந்தனர். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில், முத்தையா முரளிதரன் அணியில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
சச்சின் டாஸ் வெற்றி
இந்தியா - இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதிய டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். சேஸிங் செய்ய எளிதாக இருக்கும் என அவர் கணித்து, அந்த முடிவை எடுத்தார்.
சச்சின் உடல் வலி
டாஸ் நிகழ்வின் போது நீண்ட காலம் கழித்து கிரிக்கெட் ஆடுவதால் ஏற்படும் சிரமம் பற்றி கூறினார் சச்சின். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அந்த போட்டிக்கு பின் கடும் உடல் வலி ஏற்பட்டதாக கூறினார் அவர்.
இந்திய அணி வீரர்கள்
இந்தப் போட்டியில் இந்திய அணியில், சேவாக், சச்சின், கைஃப், மன்ப்ரீத் கோனி, யுவராஜ் சிங், இர்பான் பதான், ஜாகிர் கான், முனாப் பட்டேல், பிரக்யான் ஓஜா, சஞ்சய் பங்கர், சமீர் டிகே உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.