அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர்
இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இந்திய அணிக்காக இதுவரை 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிவரும் இவர் கடந்த சீசனில் அந்த அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர் என்ற பெருமையை பெற்றார்.
விராட்டை வீழ்த்திய கலீல்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதுதான் ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய விருப்பமான தருணம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த சீசன் தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும் கலீல் அகமது குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிய விராட் கோலி
சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் அணி மோதிய நிலையில், முதல் ஓவரில் பௌலிங் போட்ட புவனேஸ்வர் குமார், பார்த்திவ் படேலின் விக்கெட்டை வீழ்த்திய நிலையில், இரண்டாவது ஒவரை கேப்டன் கேன் வில்லியம்சன் கலீல் அகமதுவிடம் கொடுத்தார். இதையடுத்து விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கலீலுக்கு கிடைத்தது விராட் கோலியின் விக்கெட்.
மனம் திறந்த கலீல்
தன்னுடைய முதல் ஓவரின் 4வது பந்திலேயே விராட் கோலியை வீழ்த்தினார் கலீல் அகமது. இதுகுறித்து மனம்திறந்துள்ள அவர், கோலியை திட்டமிட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார். கலீல் அகமதுவின் பந்துவீச்சில் கீப்பர் விரித்திமான சாஹாவின் கீப்பிங்கில் அவுட் ஆனார் விராட் கோலி. தான் நீளமான அதேநேரத்தில் மெதுவான பந்தை போட்ட நிலையில், அதை அடித்து ஆட முற்பட்ட கோலி, அவுட் ஆனதாக தெரிவித்துள்ளார் கலீல்.