வரும் அக்டோபரில் நடக்க திட்டம்
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடரை வரும் 2022ம் வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து ஐசிசியின் கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்கள் வரும் 28ம் தேதி கூடி இந்த தொடர் குறித்து பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க உள்ளனர்.
ஒருநாள், டி20 போட்டிகளின் கேப்டன்
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாபர் அசாம், முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் வீரராகவும், கேப்டனாகவும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்தில் துவங்க வேண்டும் என்று பாபர் அசாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதிக ஊக்கம் அவசியம்
ஆனால் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் டி20 உலக கோப்பை போட்டிகளை விளையாடுவது மிகவும் கடினமானது என்றும் பாபர் அசாம் கூறியுள்ளார். அவ்வாறு விளையாடுவதற்கு மேலும் அதிக ஊக்கம் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் முதல்முறையாக கேப்டனாகவும் வீரராகவும் பங்கேற்கவுள்ள டி20 தொடரை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடைபிடிப்பது கடினம்
ஆன்லைனில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர் அசாம், மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வேளையில், பந்தை ஷைன் செய்யக் கூடாது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், போட்டியின்போது எந்தவிதமான கொண்டாட்டத்திலும் ஈடுபடக் கூடாது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவற்றை கடைபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.