ராஜஸ்தான் ராயல்சுடன் மோதல்
ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரிலும் சிறப்பாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. நாளை அபுதாபியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மோதவுள்ளது.
கோலி, வில்லியர்ஸ் கருத்து
கடந்த 2016ல் நடைபெற்ற சீசனில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை வந்த ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் கோப்பையை பறிகொடுத்தது. இந்நிலையில், அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் இந்த ஆண்டும் கடந்த 2016ன் உற்சாக மனநிலை அணயில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சஹல் உற்சாகம்
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஆர்சிபி சிறப்பாக உள்ளதாக அந்த அணியின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் இந்த முறை ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வெற்றி கொள்வதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆர்சிபி சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்சிபி வெற்றியை உறுதிசெய்த சஹல்
ஐபிஎல்லில் இதுவரை 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யுஸ்வேந்திர சஹல். கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 48 ரன்களை கொடுத்து எதிரணியின் துவக்க ஆட்டக்காரர் குவின்டன் டீ காக்கை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். இதன்மூலம் ஆர்சிபி வெற்றியை உறுதி செய்தார்.