சிறப்பான முகமது ஷமி
இந்தியா -ஆஸ்திரேலியா தொடரின் முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி உள்ளார். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷமி இருவரும் இணைந்து இந்திய அணியை இந்த தொடரில் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல பௌலர்கள் அணியின் பலத்தை கூட்டும்வகையில் உள்ளனர்.
5 ரன்னில் சுருக்கி அபாரம்
ஐபிஎல் 2020 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷமி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரை 5 ரன்களுக்கு சுருக்கினார். ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டீ காக் ஆகியோர் அந்த சூப்பர் ஓவரில் விளையாடிய நிலையிலும் தன்னுடைய அபார பந்துவீச்சால் அதை சாத்தியப்படுத்தினார்.
பாரத்தை இறக்கி வைக்க உதவி
இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடர் தன்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்து சரியான பாதையில் தன்னை வழிநடத்தி வருவதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உதவியதாகவும் ஷமி கூறியுள்ளார்.
உதவிய ஐபிஎல் 2020 தொடர்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் எந்த நெருக்கடியும் இல்லாமல் தற்போது தன்னால் விளையாட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் லாக்டவுன் நேரத்தில் தன்னுடைய பௌலிங் மற்றும் பிட்னசில் சிறந்த கவனம் செலுத்தியதாகவும் தற்போது மிகவும் சிறப்பாக உணர்வதாகவும் அவர் கூறினார்.
முகமது ஷமி திட்டம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த தொடரில் தான் டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஷமி கூறினார். ஐபிஎல்லை அடுத்து தற்போது வெள்ளை பந்து போட்டிகளில் விளையாட தயாராகி உள்ளதாகவும் சிவப்பு பந்துகளில் விளையாட அதிகமான பயிற்சி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் அடிப்படை எதுவும் மாறவில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.