லசித் மலிங்கா
மும்பை அணியில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஏரளாமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதேபோல் மும்பை அணியின் ரசிகர்களை தனது மந்திர பந்துவீச்சால் கட்டி போட்டவர்தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. 2019-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத்த லசித் மலிங்காவை மும்பை ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.
ரசிகர்கள் கிடைத்தனர்
மும்பை அணி வென்ற 5 ஐ.பி.எல் கோப்பைகளில் 4 கோப்பைகளை வெல்ல அணியில் முக்கிய பங்காற்றியவர் லசித் மலிங்கா. மும்பை அணியையும், லசித் மலிங்காவையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு தொடக்க காலத்தில் இருந்து அவர் மும்பை அணிக்காக பங்காற்றியுள்ளார். இந்த நிலையில் மும்பை அணியின் விளையாடிய அனுபவம் குறித்து லசித் மலிங்கா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' நான் மும்பை இந்தியன்ஸுடன் விளையாடியபோது, இந்தியாவிலும் உலகெங்கிலும் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
காயம்
2008 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனது பெயர் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து எனது மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் 2008-ம் ஆண்டில் நான் உண்மையில் துரதிர்ஷ்டவசமாக இருந்தேன். முதலில் எனக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது, பிறகு நான் ஐபிஎல் போட்டியை தவறவிட்டேன், இலங்கை அணியின் வருடாந்திர ஒப்பந்தத்தை இழந்தேன். 2009-ம் ஆண்டில், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அனைத்து மருத்துவர்களும் பிசியோக்களும் நான் விளையாட விரும்பினால், டி20 கிரிக்கெட் போன்ற குறுகிய வடிவ போட்டிகளில் விளையாடும்படி என்னிடம் கூறினார்கள்.
வாய்ப்பும் கிடைக்கவில்லை
ஆனால் எனக்கு இலங்கை அணியில் விளையாட எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, எனக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. 2009-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் கிடைத்தது. நான் இதில் பங்கேற்க வேண்டும். எனக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. நான் இதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்கினேன், அவர்கள் எனது நிலைமையை புரிந்து கொண்டனர். அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா சென்று ஐ.பி.எல்,லில் விலளயாடினேன்.
வாழ்க்கையே மாறி விட்டது
எனது வாழ்க்கையே மாறி விட்டது. ஐ.பி.எல் காரணமாக மீண்டும் தேசிய அணியில் இடம் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய நாட்கள் எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. 2019-ம் ஆண்டு கடைசி பந்தில் மும்பைக்கு வெற்றி தேடி கொடுத்தது அற்புதமான தருணமாகும் இவ்வாறு லசித் மலிங்கா கூறினார்.