கிழட்டுச் சிங்கம்
இந்திய அணியில் சச்சினுடன் இணைந்து ஓப்பனராக களம் கண்ட சேவாக்கை பார்த்தாலே எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனம். காட்டுத்தனமான அவரது ஷாட்டுகளில் சிக்கி சீரழியாத பவுலர்களே இல்லை எனும் அளவுக்கு கிழித்து தொங்கவிட்டுள்ளார். ஆனால் வயது காரணமாக சச்சினுக்கு முன்பே அணியைவிட்டு நடையை கட்ட வேண்டியதாயிற்று சேவாக்குக்கு. பார்மில் இல்லாத அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்வாரில்லை. கிழட்டு சிங்கமாகவே அவர் காட்சியளித்தார்.
ஐபிஎல் வாய்ப்பு
டெல்லியை சேர்ந்த சேவாக் ஐபிஎல் சீசன்-7ல் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த பந்தையத்தில் ஜொலித்தால் மீண்டும் இந்திய அணியில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
சோடை போன சேவாக்
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப்புக்காக பெரிதாக எதையும் சேவாக் சாதித்து காண்பிக்கவில்லை. சில பந்தையங்களில் குறைந்த பந்துகளில் அடித்த 30 ரன்கள்தான் அவரது சாதனையாக இருந்தது. மூக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு மோசமாக விளையாடும் சேவாக்கை "பெரியவரே கண் தெரியலியா" என்று அவரது ரசிகர்களே கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். சில ரசிகர்கள் தங்கள் ஆதர்ஷ அதிரடி நாயகனின் பரிதாப ஆட்டத்தை பார்த்து கண்களை மூடிக்கொண்டனர்.
கேலி செய்த சின்ன பசங்க
சேவாக் மகன் ஆர்யாவீர் பள்ளியில் படித்து வருகிறார். சேவாக்தான் இவரது தந்தை என்பதை தெரிந்துகொண்ட உடன் படிக்கும் சிறுவர்கள், உன் அப்பா சரியாகவே ஆடுவதில்லை, உடனே அவுட் ஆகிவிட்டு வந்துவிடுகிறார் என்று கிண்டல் செய்துள்ளனர்.
அப்பாவிடம் ஆதங்கப்பட்ட மகன்
நண்பர்கள் சொன்னதை அப்படியே வந்து சேவாக்கிடம் கூறிய ஆர்யாவீர், எப்போப்பா அடிப்பீங்க என்று அழாத குறையாக கேட்டுள்ளான். எப்போதெல்லாம் சேவாக் சீக்கிரம் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையை கட்டுகிறாரோ அப்போதெல்லாம், போன்போட்டு தந்தையிடம் புலம்பியுள்ளான் மகன்.
சச்சின் கொடுத்த ஐடியா
தன்னால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாதது குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் ஆலோசனை கேட்டுள்ளார் சேவாக். ஒரே ஒரு முறை 10 ஓவரை தாண்டி விளையாடிவிட்டால் தன்னம்பிக்கை அதிகரித்து சிறப்பாக ஆட முடியும். எனவே நிலைத்து நின்று, ஒரு இன்னிங்ஸ் சிறப்பாக ஆடினால் அதன்பிறகு தொடர்ந்து பட்டையை கிளப்பலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார் சச்சின்.
விஸ்வரூபம் எடுத்த வீரு
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் சென்னை அணியுடன் நேற்று மோதியது பஞ்சாப். அதற்கு முந்தைய மேட்சில்தான் கொல்கத்தாவுடன் பஞ்சாப் தோற்றிருந்ததால் வீரர்கள் உற்சாகமின்றி காணப்பட்டனர். சீனியர் பிளேயர் என்ற முறையில் அணியை தோளில் சுமக்க வேண்டிய கட்டாயம் சேவாக்குக்கு. அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. 12 பவுண்டரிகள், 8 இமாலய சிக்சர்கள் என 58 பந்துகளில் 122 ரன்களை குவித்து விஸ்வரூபத்தை காண்பித்தார் வீரேந்திரசேவாக்.
ஒன்மேன் ஷோ
பஞ்சாப்புக்கு ஓப்பனிங்தான் நன்றாக இருந்தது. இடையில் எந்த பேட்ஸ்மேனும் ஜொலிக்கவில்லை. அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் பரம எதிரி அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து சொற்ப ரன்னில் அவுட்டான நிலையில் ஒரே நபராக இருந்து அணியின் ஸ்கோரை 226க்கு அழைத்துச் சென்றது சேவாக்தான். பொன்னியின் செல்வனில் வர்ணிக்கப்பட்டிருக்கும், விஜயாலய சோழனின் வயது முதிர்ந்த காலத்து போர்க்கள வீர சாகசங்களை நினைவுபடுத்துவதுபோல இருந்தது சேவாக்கின் ஆட்டம்.
மகனுக்கு சமர்ப்பணம்
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சேவாக், போன்போட்டு டார்ச்சர் கொடுத்த எனது மகனுக்கு இந்த இன்னிங்சை சமர்ப்பிக்கிறேன் என்று கூறி குடும்பத்தை கூல் செய்தார்