தாயகம் திரும்பிய ரெய்னா
சுரேஷ் ரெய்னா ஏன் இந்தியா திரும்பி விட்டார் என்பது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்து விட்டன. ஒதுக்கிய அறை சரியில்லை என்று கூறியதால் மோதல் ஏற்பட்டது, தோனியுடன் ஏதோ பிரச்சினை என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. கடைசியில் அவரது உறவினர்கள் மீது இந்தியாவில் நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலால்தான் அவர் தாயகம் திரும்பியதாக கூறப்பட்டது.
மாமா, மகன் படுகொலை
அதற்கேற்ப அவரது மாமாவும், மாமா பையனும் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நேற்று ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார் சுரேஷ் ரெய்னா. கொடூரமான படுகொலை என்றும் அவர் வர்ணித்திருந்தார். இந்த கொலை தொடர்பாக தற்போது விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வரும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்பஸ் இணையதளத்திற்கு ஒரு விரிவான பேட்டி கொடுத்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
சுரேஷ் ரெய்னா பேட்டி
இந்த பேட்டியில் தான் ஏன் இந்தியா திரும்பினேன் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விளக்கியுள்ளார். தான் தாயகம் திரும்பியது தனிப்பட்ட முடிவு என்று அவர் விளக்கியுள்ளார். அதை விட முக்கியமாக தன்னைப் பற்றி சீனிவாசன் கூறிய கருத்துக்கள் பற்றியும் அவர் பதில் கொடுத்துள்ளார். அதன்படி சீனிவாசன் தன்னைத் திட்டுவதற்கு முழு உரிமையும் உள்ளது போல கருத்து தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
என் அப்பா மாதிரி சீனிவாசன்
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், என். சீனிவாசன் எனக்கு அப்பா போல. எப்போதுமே அவர் எனக்கு ஆதரவாக இருப்பவர். எனது இதயத்திற்கு வெகு அருகே இருப்பவர். அவர் என்னை தனது இளைய மகன் போலத்தான் நடத்துவார். அவர் சொன்னதை எல்லோரும் தவறாக எடுத்துக் கொண்டு விட்டதாகவே நான் கருதுகிறேன். ஒரு அப்பா மகனைத் திட்டினால் அது தவறாகுமா.. அது போலத்தான் இதுவும் என்றார்.
எல்லாம் முடிந்தது
நான் எதற்காக தாயகம் திரும்பினேன் என்பது குறித்த உண்மையான தகவல் அப்போது அவருக்குக் கிடைக்காத காரணத்தால் அது போல கூறியிருந்தார். இப்போது அவருக்கு காரணம் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு அவர் எனக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்பியிருந்தார். நானும் அவருடன் பேசி விட்டேன். இந்த விவகாரத்தை நானும், அணியும் அப்படியே கடந்து போக விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இதன் மூலம் சீனிவாசன் - சுரேஷ் ரெய்னா விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டியுள்ளது.