கேப்டன் கங்குலி
2000த்தின் துவக்கத்தில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதுவரை பொறுமையான அணியாக இருந்த இந்திய அணியை, துடிப்பான, ஆக்ரோஷமான அணியாக மாற்றினார். இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிட முடியாது என்ற நிலையை உருவாக்கினார்.
எதிரணி கேப்டன் பாவம்
கங்குலி தான் கேப்டனாக இருந்த போது ஒரு வழக்கத்தை வைத்து இருந்தார். எதிரணி கேப்டன்கள் இந்திய அணி வீரர்களை சீண்டினால் டாஸ் போடும் சமயத்தில் அவர்களை காக்க வைப்பார். அப்படி பல பெரிய அணிகளின் கேப்டன்களே திணறி உள்ளனர்.
ஸ்டீவ் வாஹ் அனுபவம்
இது குறித்து ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான் ஸ்டீவ் வாஹ் 2001 சுற்றுப்பயணத்தில் கங்குலி தன்னை வேண்டும் என்றே பல போட்டிகளில் டாஸ் போட வராமல் காக்க வைத்ததாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டு புலம்பி இருக்கிறார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைனும் விதிவிலக்கல்ல.
நாசிர் ஹுசைன் என்ன சொன்னார்?
கங்குலியின் இந்த வழக்கம் பற்றி நாசிர் ஹுசைன் சமீபத்தில் பேசுகையில், கங்குலிக்கு முன் இருந்த இந்திய அணி எப்படி இருந்தது, கங்குலி எப்படி இந்திய அணியை மாற்றினார் என்பது பற்றி குறிப்பிட்டார். மேலும், டாஸ் விஷயத்தில் அவரை தான் வெறுத்ததாக கூறி உள்ளார்.
கங்குலிக்கு முன் இந்திய அணி
"நான் பல முறை கூறி உள்ளேன். அவர் தான் இந்திய அணியை கடினமான அணியாக மாற்றினார். கங்குலிக்கு முன் இருந்த இந்திய அணியும் திறமையான அணிதான். ஆனால், அவர்கள் நம்மை சந்திக்கும் போது வாழ்த்து கூறுவார்கள். காலை வணக்கம் கூறுவார்கள். அது நல்ல அனுபவமாக இருக்கும்" என்றார் நாசிர் ஹுசைன்.
ஆக்ரோஷம்
"கங்குலி அணியுடன் ஆடும் போது, நாம் ஒரு போரில் இருக்கிறோம் என உணர்வோம். கங்குலி, இந்திய ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டார். இது வெறும் கிரிக்கெட் விளையாட்டல்ல. அதையும் விட முக்கியமானது. அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர்களை அணியில் தேர்வு செய்தார்." என்றார்.
கங்குலியை பிடிக்காது
"நான் கங்குலிக்கு எதிராக ஆடிய போது அவரை வெறுத்தேன். அவர் என்னை ஒவ்வொரு முறையும் டாஸ் போட காத்திருக்க வைத்தார். கங்குலி, மணி 10.30 ஆகி விட்டது. டாஸ் போட வேண்டும் என நான் கூறும் அளவுக்கு இருந்தது." என்றார் நாசிர் ஹுசைன்.
இப்போது எப்படி?
அதே சமயம் தற்போது இருவரும் கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் வர்ணனை செய்து வருவதை குறிப்பிட்ட ஹுசைன், தற்போது அவரை ரசிப்பதாக கூறி இருக்கிறார். இப்போதும் கங்குலி வர்ணனை செய்ய தாமதமாக வருவார். ஆனால், அவருடன் நல்ல விதமாக உணர முடிகிறது என்றார்.
மறக்க முடியாத நாட்வெஸ்ட்
கங்குலி - நாசிர் ஹுசைன் மோதலில் மறக்க முடியாதது நாட்வெஸ்ட் தொடர் தான். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியின் அருகே இருந்து இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது கங்குலி சட்டையை கழற்றி, சுழற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.