திணறிய இந்தியா
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
எல்பிடபிள்யூ அப்பீல்
முதல் நாளில், பிட்ச் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. பந்துகள் ஸ்விங் ஆகின. ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், எப்படி இங்கிலாந்து சீமர்கள் ஸ்விங் தாக்குதல் நடத்தினார்களா, அப்படி, இந்த முதல் இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது ஸ்விங் அட்டாக் நடத்தினார்கள். ஆனால், இரண்டாம் நாளுக்கு பிறகு, பிட்ச் சற்று பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்து வருகிறது. அதேபோல், ஸ்பின்னர்களுக்கும் ஒத்துழைப்பதாய் தெரிகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு, மொயீன் அலி பந்து வீச வந்த முதல் ஓவரிலேயே, ரோஹித் ஷர்மாவுக்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டது. உணவு இடைவேளை முடிந்து இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கியிருக்கும் நிலையில், மொயீன் அலி அதிகம் ஓவர்கள் வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கேப்டன் ஜோ ரூட்டும் பந்து வீசுவார் என்று தெரிகிறது.
துரதிர்ஷ்டவசமானது
இந்திய அணியை பொறுத்தவரை, ஜடேஜா மட்டுமே இந்தியா வசமுள்ள ஒரே ஸ்பின் ஆப்ஷன். ரோஹித் ஷர்மா கூட ஸ்பின் வீசுவார். ஆனால், இப்போது அவர் பந்து வீசுவதில்லை. இந்நிலையில், உணவு இடைவேளையின் போது பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், "இந்த ஓவல் மைதானத்தின் பிட்ச் மாறி வருகிறது. நான்காவது நாளான நாளை ஸ்பின் நன்றாக எடுக்கும். அந்த வகையில், அஷ்வின் இல்லாமல் இந்திய அணி விளையாடுவது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. நிச்சயம் அது அவர்களுக்கு பெரிய சிக்கலாக அமையும். அஷ்வின் இருந்திருந்தால், நேற்று இரண்டாவது நாளிலேயே, இங்கிலாந்தின் மிடில் மற்றும் லோ ஆர்டரை குலைத்திருப்பார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதில் கோட்டை விட்டனர்" என்றார்.
பொறுமை, அமைதி
ஏற்கனவே, இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே, ஓவல் பிட்சின் கடைசி இரண்டு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கணிப்புகள் வெளியாகின. இப்போது நாசர் ஹுசைனும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, அஷ்வின் இல்லாதது இந்திய அணி நிச்சயம் சிக்கலாகப் போகிறது என்றும் கூறி ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, நமது பேட்ஸ்மேன்களை கிண்டல் செய்யும் வகையிலும் அவர் பேசியுள்ளார். அதாவது, "2வது இன்னிங்ஸில் இந்திய ஓப்பனர்கள் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தாலும், நிச்சயம் அவர்களது பேட்டிங் சீர்குலையும். ஹெட்டிங்லே டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினாலும், அவர்களது பேட்டிங் சரிந்தது போல, இந்த முறையும் திணறுவார்கள். இங்கிலாந்து சற்று பொறுமையாக, அமைதியாக பந்து வீசினாலே போதும். இந்திய பேட்டிங் ஆர்டர் கொலாப்ஸ் ஆகிவிடும்" என்று கூறியிருக்கிறார்.