4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின்மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ஆடிவருகிறார் இந்திய பௌலர் நடராஜன்.
டிச. 4ம் தேதி டி20 போட்டி
கடந்த டிசம்பர் 2ம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்று முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நட்ராஜ். இதையடுத்து டிசம்பர் 4ம் தேதி தனது முதல் டி20 போட்டியில் பங்கேற்று முதல் விக்கெட்டை வீழ்த்திய நிலையில், இன்றைய தினம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
நெட் பௌலராக ஆஸ்திரேலிய தொடரில் தேர்வாகியிருந்த நடராஜ், இந்த ஒரு மாத காலத்திலேயே 3 வடிவங்களின் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய தனது முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்த ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை நடராஜ் வீழ்த்தியுள்ளார்.
மாறிய ஆட்டத்தின் போக்கு
முதலில் வேட் விக்கெட்டையும், அடுத்த ஓவரில் லாபுஸ்சாக்னே விக்கெட்டையும் வீழ்த்தி தான் 3 வடிவங்களுக்கும் பொருத்தமான பௌலர் தான் என்பதை அனைவருக்கும் நிரூபித்துள்ளார் நட்ராஜ். அவரின் இந்த அடுத்தடுத்த ஓவர்களின் அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.