4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துவக்க வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த போதிலும் அந்த அணி வீரர்கள் நிதானமாக ஆடி வருகின்றனர்.
நடராஜன் பங்கேற்பு
இந்த போட்டியின் மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார் தமிழக வீரர் நடராஜன். இந்த சுற்றுப்பயணத்தில் நெட் பௌலராக ஆஸ்திரேலியா சென்ற அவர், தனது கடின உழைப்பால் நெட் பயிற்சியின்போது தேர்வாளர்களை கவர்ந்து போட்டிகளில் பங்கேற்று சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
3 வடிவங்களில் போட்டி
முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அவர், தனது சிறப்பான பௌலிங்கின்மூலம் அனைவரையும் கவர்ந்து, தொடர்ந்து டி20 போட்டிகளில் பங்கேற்று பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றார். தற்போது டெஸ்ட் போட்டியிலும் தனது முதல் பயணத்தை துவங்கியுள்ளார். ஒரே தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்று சாதித்துள்ளார் நடராஜன்.
300வது பௌலர் நடராஜன்
இந்நிலையில் இந்திய டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள 300வது இந்திய பௌலர் என்ற பெருமையும் நடராஜனுக்கு இந்த போட்டி மூலம் கிடைத்துள்ளது. இன்றைய போட்டியிலும் இவர் கண்டிப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி இந்த தொடரை கைப்பற்ற உறுதுணையாக இருப்பார் எறு எதிர்பார்க்கப்படுகிறது.