கே.எல். ராகுல் சிறப்பு
எம்எஸ் தோனிக்கு மாற்றாக கருதப்பட்ட ரிஷப் பந்த், அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் இந்திய அணியில் தன்னை நிரூபிக்க தவறினார். தொடர்ந்த அவரது சொதப்பலான ஆட்டத்தின் பலனாக அந்த வாய்ப்பு தற்போது கே.எல் ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் தன்னை நிரூபித்து வருவதால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தோனியுடன் பேட்டிங் பார்ட்னராக விருப்பம்
இந்நிலையில் டெல்லி கேபிடல்சின் டிவிட்டர் பக்கத்தில் பேசிய ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் பேட்டிங் பார்ட்னராக விளையாடவே தான் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடன் விளையாட தனக்கு அதிகப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள பந்த், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
திட்டத்தை கூறும் தோனி
மைதானத்தில் தோனி இருந்தால் எல்லா விஷயங்களும் பர்பெக்டாக இருக்கும் என்று கூறியுள்ள பந்த், நமக்கான திட்டத்தை தோனி கூறிவிடுவார், அதை நாம் கடைபிடித்தாலே போதும் என்றும் தெரிவித்துள்ளார். ரன்களை சேஸ் செய்யும் போட்டிகளில் தோனியின் திறன் அபாரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
வித்தியாசமான அனுபவம்
கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் விளையாடும்போதும் தான் வித்தியாசமான அனுபவத்தை உணர்வதாகவும் பந்த் கூறியுள்ளார். போட்டியின்போது அவர்கள் மனநிலை எவ்வாறு செயல்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போதும் தான் உற்சாகமாக உணர்வதாகவும் பந்த் குறிப்பிட்டுள்ளார்.