வெள்ளிக்கிழமை துவங்கிய பயிற்சி
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த 21ம் தேதி துபாய் சென்ற சிஎஸ்கே வீரர்கள் இருவர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அந்த அணியின் முக்கிய வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணியிலிருந்து விலகி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். இந்த காரணங்களால் தடைபட்ட அணியின் பயிற்சி போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் தாமதமாக துவங்கியது.
இரவு நேர பயிற்சி
இந்நிலையில் தாமதமாக துவங்கினாலும், மற்ற அணிகளுக்கு இணையாக தங்களது பயிற்சிகளை சிஎஸ்கே வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களிலும் அவர்கள் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். நேற்றைய தினம் அவர்கள் இவ்வாறு இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டதை அந்த அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு
இதில் கேப்டன் தோனி, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று நெட் பிராக்டீஸ் செய்தனர். ஷர்துல் தாக்கூர், அனைவருக்கும் ஹலோ சொல்வதுடன் பயிற்சி ஆட்டங்களுக்கு பிறகு சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா ஆகியோரும் தங்களது பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே
எங்க 'தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க' என்ற பாட்டு பின்புலத்தில் ஓட அனைத்து வீரர்களும் உற்சாகத்துடன் தங்களது பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிஎஸ்கே தாமதமாக தங்களது பயிற்சிகளை துவங்கினாலும் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.