தோனி பிறந்தநாள்
தோனி என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது ஐசிசி கோப்பைகள் தான். அதிலும் குறிப்பாக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் அவர் அடித்த கடைசி சிக்ஸரை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் இந்திய ரசிகர்களின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நினைவாக்கி கொடுத்தது அந்த சிக்ஸர் தான். எனவே அதனை ஒவ்வொரு ஆண்டும் தோனியின் பிறந்தநாளன்று ரசிகர்கள் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.
கம்பீரின் பதிவு
இந்நிலையில் அதனை பார்த்து பொறாமை படும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார் கவுதம் கம்பீர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கவுதம் கம்பீர் 97 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இன்று வரை தோனி அடித்த சிக்ஸர் புகழ் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அவர் இன்று தனது ஃபேஸ் புக் கவர் பக்கத்தில், தான் உலகக்கோப்பையில் சிரமப்பட்டு பேட்டிங் செய்த புகைப்படத்தை வைத்துள்ளார்.
கடும் விமர்சனம்
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர். தோனியின் பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபடுவதா?, இந்த பதிவால் இன்று உங்களுக்கு ஆட்ட நாயகன் விருதா கொடுக்கப்போகிறார்கள். இது முற்றிலும் பொறாமை குணம் என கம்பீரை விளாசி வருகின்றனர்.
கம்பீருக்கு ஆதரவு
ஆனால் மற்றொரு புறம் கம்பீருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. கம்பீர் அடித்த 97 ரன்கள்தான் இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தது. அவரை பாராட்டாமல், 91 ரன்களை அடித்த தோனியை மட்டும் எப்போதும் பாராட்டுகிறார்களே, இது எப்படி நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் அவர்கள், இந்திய அணி கூட்டு முயற்சியால் வென்ற கோப்பையை தோனி ஒருவரின் பெயரில் மட்டும் எழுதுவதா என்றும் விளாசியுள்ளனர். இதனால் இணையத்தில் புதிய போர் வெடித்துள்ளது.