புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள்
தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இந்த புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில், அவர்களை இறுதி செய்யும் பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
சவுரவ் கங்குலி உறுதி
டெல்லியில் நடைபெற்ற பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக மதன்லால் மற்றும் சுலக்ஷனா நாயக் உள்ள நிலையில், எம்.பி.யாக உள்ள கவுதம் கம்பீருக்கு பதிலாக புதிய உறுப்பினர் மிக விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் இவர்கள் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
பழைய தேர்வுக்குழு தேர்வு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. சர்வதேச டி20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியையும் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினரே தேர்ந்தெடுத்துள்ளதாக சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்த அணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச ஒருநாள் தொடர்
புதிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகளுக்காக லஷ்மன் சிவராமகிருஷ்ணன், அஜித் அகர்கர், ராஜேஷ் சவுஹான் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் இதற்கான இன்டர்வியூ விரைவில் நடைபெறும் என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
சவுரவ் கங்குலி திட்டவட்டம்
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கங்குலி, முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தன்னுடைய பிட்னசை நிரூபிக்க தவறியுள்ள நிலையில், தற்போது இந்திய அணியில் அவர் இடம்பெற மாட்டார் என்றும். அவர் தன்னுடைய பிட்னசை நிரூபிக்க சிறிது காலம் தேவைப்படும் என்றும் கூறினார்.