பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அயல்நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அணி 2002ம் ஆண்டுக்கு பிறகு (18 வருடங்களுக்கு பிறகு) தற்போது தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் வீரர்கள் பாகிஸ்தானில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி பெற்று வந்தனர்.
அதிர்ச்சி தகவல்
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கான கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
என்ன காரணம்
பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை, என்றும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் கூறுவது தவறுதான், ஆனால் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்புக் கோரியுள்ளது.
பாகிஸ்தான் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உலகின் சிறந்த உளவுத்துறை எங்கள் நாட்டில் உள்ளது. அனைத்து நாட்டு அணிகளுக்கு வழங்கக்கூடிய உச்சக்கட்ட பாதுகாப்பை தான் நியூசிலாந்து அணிக்கு வழங்கினோம். அவர்கள் பாதுகாப்பாக ஓட்டல் அறையில் உள்ளனர். ஆனால் நியூசிலாந்து இதுபோன்று அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த தொடரை நடத்தி முடிக்கவே பாகிஸ்தான் வாரியம் விரும்புகிறது எனத்தெரிவித்துள்ளது.