இந்தியா -நியூசிலாந்து டி20 தொடர்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சர்வதேச டி20 தொடர், சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, இதுவரை எந்த அணியும் மேற்கொள்ளாத புதிய சாதனையை படைத்துள்ளது.
விராட்டுக்கு ஓய்வு
மவுண்ட் மாங்கானுய் பகுதியில் நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில், 60 ரன்கள் அடித்தபோது அவரும் காயம் காரணமாக இடையிலேயே பெவிலியனுக்கு திரும்ப நேரிட்டது. இதையடுத்து கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி போட்டியை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி பாராட்டு
இந்நிலையில் கேன் வில்லியம்சன் மிகச்சிறந்த வீரர் என்றும் நியூசிலாந்து அணி மிகச்சிறந்தவர் கைகளில் உள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். தனக்கும் கேன் வில்லியம்சனுக்கும் ஒரே மாதிரியான மனநிலை மற்றும் கொள்கைகள் உள்ளதாக பெருமை தெரிவித்த அவர், உலகின் இரண்டு மூலைகளில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற ஒற்றுமை உள்ளது குறித்து தான் வியப்படைவதாகவும் தெரிவித்தார்.
கேப்டன் பதவி குறித்து கேள்வி
முன்னதாக அஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதிய நியூசிலாந்து 3க்கு 0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து கேன் வில்லியம்சனின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுந்தது. இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தற்போது கேன் வில்லியம்சன் குறித்து விராட் கோலி தனது ஆதரவு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கேன் வில்லியம்சன் திட்டவட்டம்
இதனிடையே தன்னுடைய அணியின் நலனுக்காக தான் பதவி விலகவும் தயாராக உள்ளதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அணியின் நலனை கருத்தில் கொண்டு அடுத்தகட்டமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் தனிப்பட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.