கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை கிட்டத்தட்ட முடங்கி விட்டது. கிரிக்கெட் விளையாட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டி எதுவுமே நடைபெறவில்லை.
கடும் நஷ்டம்
பல நாட்டு கிரிக்கெட் அமைப்புகளும் நஷ்டம் அடைந்துள்ளன. நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பும் கடும் நஷ்டம் அடைந்துள்ளது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக குறைந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
80 ஊழியர்கள் விடுவிப்பு
எனினும், வருமானம் ஈட்டும் வெளிநாட்டுத் தொடர்களை நடத்த முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில், வருவாய் இழப்பை ஈடுகட்ட 80 ஊழியர்கள் விடுவித்து உள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு.
சிக்கன நடவடிக்கை
ஊழியர்களை விடுவித்ததன் மூலம் 11 கோடி ரூபாயும், மற்ற சிக்கன நடவடிக்கைகள் மூலம் மொத்தமாக 28 கோடியும் மிச்சம் பிடிக்க திட்டமிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு. கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.