ஐசிசி அறிவிப்புக்கு காத்திருப்பு
கடந்த மார்ச் 29ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளிப் போகும் பட்சத்தில் அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு, ஐசிசி அறிவிப்பிற்காக காத்திருக்கிறது.
நியூசிலாந்தின் ஆர்வம்
இந்தியாவில் கொரோனா பரவல் 7.5 லட்சத்தை தாண்டியுள்ளதால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இந்நிலையில், யூஏஇ, இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. நியூசிலாந்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது. இதை பிசிசிஐ நிர்வாகி ஒருவரும் உறுதி செய்திருந்தார்.
விருப்பம் தெரிவிக்கவில்லை
இந்நிலையில் நியூசிலாந்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தங்களை யாரும் அணுகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு தாங்கள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுவது வெறும் வதந்தியே என்று அதன் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி அறிவிப்பு
ஐபிஎல்லின் 13வது சீசன் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளநிலையில், இதுவரை கடந்த 2009 பொது தேர்தலின் போது மட்டுமே ஐபிஎல் தொடர் முழுமையாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. தற்போது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், வெளிநாட்டில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அதை இறுதி சாய்சில் வைத்துள்ளதாகவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.