வெல்லிங்டன் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கைல் ஜாமீசன் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான கடந்த சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய கைல் ஜாமீசன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில் டிம் சவுதியும் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி மோதிய கடந்த 14 போட்டிகளில் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 13ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்போம் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை அடுத்தடுத்த சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் செய்த கையுடன் அடுத்ததாக ஆஸ்திரேலியாவை ஒருகை பார்த்துவிடும் நோக்கத்தில் நியூசிலாந்து அணியினர் உள்ளனர். வரும் 13ம் தேதி ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வீரர்களை கொண்ட இந்த அணியில் இளம் வீரர் கைல் ஜாமீசன் இடம்பெற்றுள்ளார். இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தன்னுடைய முதல் போட்டிகளை எதிர்கொண்ட ஜாமீசன், தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்களை குறிப்பாக கேப்டன் விராட் கோலியை கதறவிட்டார். இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக கைல் ஜாமீசன் உருமாறியுள்ளார். இதே கருத்தையே அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டும் தெரிவித்துள்ளார். தன்னுடைய சர்வதேச கேரியரில் சிறப்பாக ஆடியதன்மூலம் நியூசிலாந்து அணியின் முக்கிய சொத்தாக ஜாமீசன் மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, டெஸ்ட் வடிவத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் அணியின் பந்துவீச்சாளர் டிம் சவுதி மீதும் நம்பிக்கை வைத்து இந்த சர்வதேச ஒருநாள் தொடரில் அவரது பெயரையும் இணைத்துள்ளது தேர்வுக்குழு. மேலும் காயம் காரணமாக இந்தியாவற்கு எதிரான கடந்த சர்வதேச ஒருநாள் தொடரில் இடம்பெறாத டிரெண்ட் போல்ட், மாட் ஹென்றி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளதால் அந்த அணி தற்போது மிகவும் வலிமையானதாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த 14 போட்டிகளில் வெற்றியை சுவைக்காத நியூசிலாந்து அணி தற்போது மிகவும் வலிமையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளதாகவும் தங்களது முழு திறமையையும் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்றும் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் சவாலான ஒன்று என்றும் இந்த தொடரின் அனைத்து பகுதிகளிலும் அவர்கள் மிகுந்த நெருக்கடியை நியூசிலாந்து அணியினருக்கு தருவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.