கொரோனா வைரஸ் தாக்கம்
எனினும், பிசிசிஐ அதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ள நிலையில் மற்ற நாடுகள் அழைப்பு விடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 29 துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்போதும் குறையவில்லை. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
முயற்சி
இந்த நிலையில், லாக்டவுன் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் ரசிகர்கள் இல்லாமல் கூட கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நிலை இந்தியாவில் இல்லை என்பதே உண்மை. எனினும், பிசிசிஐ பெரும் நஷ்டத்தை தவிர்க்க ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி விட முயற்சி செய்து வருகிறது.
இரண்டு நாடுகள் அழைப்பு
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவது சந்தேகம் தான் என்பதை மற்ற நாடுகளும் உணர்ந்தே உள்ளன. முதலில் இலங்கை கிரிக்கெட் போர்டு தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு விடுத்தது.
நியூசிலாந்தும் அழைப்பு
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்த நிலையில் உள்ள நியூசிலாந்தும் அழைப்பு விடுத்துள்ளது. எனினும், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்தை விட நியூசிலாந்துக்கும், இந்தியாவுக்கும் நேர வித்தியாசம் அதிகம் என்பதால் போட்டி நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதாக இருக்காது என கூறப்படுகிறது.
ஏன் போட்டி போட வேண்டும்?
ஏன் இத்தனை நாடுகள் ஐபிஎல் தொடரை நடத்த போட்டி போட வேண்டும்? பொருளாதார உயர்வு தான் முக்கிய காரணம். ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் 11,500 கோடி அளவுக்கு வருடா வருடம் வருவாய் கிடைப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
பொருளாதார சிக்கல்
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் தொடர்கள் இல்லாமல் அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் நஷ்டத்தில் உள்ளன. அந்தந்த நாடுகளும் பொருளாதார சிக்கலில் உள்ளன. எனவே, ஐபிஎல் நடந்தால் தங்கள் கிரிக்கெட் போர்டு மாற்றும் நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட அளவு முன்னேறும் என கருதுவதே ஐபிஎல் நடத்த அழைக்க முக்கிய காரணம்.