கிறிஸ்ட்சர்ச்: இந்தியா -நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் கேன் வில்லியம்சன் அவுட் ஆனபோது, கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமான சைகைகளை செய்தார்.
இதுகுறித்து கோலியுடன் ஐபிஎல் போட்டிகளில் இணையவுள்ள நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சவுதி, கோலி மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்றும் தனக்குள் உள்ள சிறப்பான திறமைகளை வெளிக்கொணர அவர் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளும் வெற்றியை நோக்கி கடுமையாக நடைபோட்டதாகவும், இரு அணிகளுக்குள்ளும் விரோதம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா -நியூசிலாந்து இடையில் ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்ற 3 தொடர்கள் கொண்ட போட்டியில் இந்தியா ஒரு தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. பல்வேறு பாராட்டுகளுக்கு இந்திய அணி உட்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரையும், தொடர்ந்து விளையாடிய டெஸ்ட் தொடரையும் இந்தியா மிகவும் மோசமாக கைவிட்டது. இந்தியாவின் இந்த ஆட்டம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் மிகவும் மோசமான கமெண்டுகளை வாங்கியுள்ளது.
விராட் கோலி குறித்த பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் தற்போது கிரிக்கெட் உலகில் உலா வரத்துவங்கியுள்ளது. இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் விராட் கோலி நொருங்கி போயுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரேயொரு தோல்வியால் எல்லாம் மாறிவிடாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தொடர் முழுமையுமே அவர் சிறப்பான ஆட்டத்தை தரத் தவறியுள்ளார். இறுதியாக விளையாடப்பட்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 38 ரன்களும் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 19 ரன்களும் மட்டுமே அவர் அடித்திருந்தார்.
முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டவர்கள் விராட் கோலியின் திறமையை மட்டுமின்றி உடல்நலனையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல தற்போது நியூசிலாந்தின் இளம் பந்துவீச்சாளர் டிம் சவுதியும் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் கேன் வில்லியம்சனின் அவுட்டையடுத்து, மோசமான சைகைகளை வெளிப்படுத்தியிருந்தார் கோலி. மேலும் ரசிகர்களை பார்த்து வாயை மூடும்படியும் சைகை காண்பித்திருந்தார்.
ஹலோ மட்டும்தான் சொல்வோம்.. கையெல்லாம் குலுக்க மாட்டோம்.. கொரோனா வந்துருச்சுன்னா!
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபத்தை வெளிப்படுத்தினார் கோலி. நடந்த சம்பவங்கள் குறித்த தெளிவின்றி கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும், சர்ச்சைகளை உருவாக்குவதற்கு தகுந்த இடம் இது இல்லை என்றும் ஆவேசமாக பதிலளித்தார்.
இதுகுறித்து பேசியுள்ள டிம் சவுதி, விராட் கோலி மிகவும் உணர்ச்சி வசப்படுபவர் என்றும், அவர் தனக்குள் உள்ள சிறப்பான திறமைகளை வெளிக்கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடர்களில் கடுமையாக போட்டியிட்டு வெற்றிபெற பாடுபட்டதாகவும், ஆனால் அணிகளுக்குள் எந்தவித விரோதமும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ள கோலி வரும் 29ம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று ஆடவுள்ளார். அவரது அணியில் டிம் சவுதியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.