நியூசிலாந்தின் க்ரெக் பார்க்லே தேர்வு
ஐசிசி தலைவராக இருந்த இந்தியாவின் சசாங்க் மனோகர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஐசிசி தலைவருக்கான தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் தள்ளிப் போனது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவில் நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்லே முன்னிலை பெற்று தலைவராக தேர்நதெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து வாக்கு
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 11 நாடுகளின் வாக்குகள் பார்க்லேவிற்கு கிடைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சிங்கப்பூரின் இம்ரான் குவாஜாவிற்கு 5 வாக்குகளே கிடைத்துள்ளன. பாகிஸ்தானின் வாக்கும் குவாஜாவிற்கே பதிவாகியுள்ளது.
16 உறுப்பு நாடுகளின் வாக்குப்பதிவு
நேற்று நடைபெற்ற ஐசிசியின் காலாண்டு கூட்டத்தில் ஐசிசி தலைவருக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 16 உறுப்பினர்களின் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 11 வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட குவாஜாவைவிட 6 வாக்குகள் முன்னிலையில் பார்க்லே வெற்றி பெற்றுள்ளார்.
விளையாட்டை சிறப்பாக கொண்டு செல்வோம்
இந்நிலையில் தான் ஐசிசி தலைவராக தேர்வானதற்கு மகிழ்ச்சியும் உறுப்பினர்களுக்கு நன்றியும் தெரிவித்த பார்க்லே, இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் அனைவரும் இணைந்து விளையாட்டை பெரிய அளவிற்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார். ஐசிசியின் 104 உறுப்பினர்களின் சார்பில் தான் பணியாற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் நியூசிலாந்தின் இயக்குநர்
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவின் முதல் கட்டம் கடந்த வாரத்தில் நடைபெற்ற நிலையில், அதில் பார்க்லே 6 வாக்குகளை பெற்றார். ஆக்லாந்தின் வழக்கறிஞராக செயல்பட்ட பார்க்லே, கிரிக்கெட் நியூசிலாந்தின்
இயக்குநராக கடந்த 2012 முதல் செயல்பட்டு வருகிறார்.