முதல் சர்வதேச ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதில் பந்துவீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் 84 ரன்களை அள்ளிக் கொடுத்தார். இதனால் இந்தியாவின் அதிகபடியான ஸ்கோரை நியூசிலாந்து எட்டி இந்தியாவை தோற்கடித்துள்ளது.
பிட்னஸ் குறித்து கேள்வி
நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா மோதிய சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் வெற்றி கொண்ட நிலையில், தற்போது சர்வதேச ஒருநாள் தொடரில் மோதி வருகிறது. இந்த முதல் போட்டியிலேயே இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி அடைந்துள்ள நிலையில், குல்தீப் யாதவ் அள்ளிக் கொடுத்த ரன்களே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது பிட்னஸ் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
பீல்டிங் கோச் ஆதரவு கருத்து
இந்நிலையில் குல்தீப் யாதவ் மிகுந்த பிட்னசுடன் உள்ளதாக பீல்டிங் கோச் ஆர் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படாததையும் அவர் குறிப்பிட்டார். இந்த சுற்றுப்பயணத்தில் குல்தீப் விளையாடிய முதல் போட்டி இது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர்
கடந்த ஆண்டில் குல்தீப் யாதவ் குறித்து பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கான திறனுள்ள முதல் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று தெரிவித்திருந்தார். மிகவும் திறமை வாய்ந்த குல்தீப் யாதவிற்கு அதிகப்படியான ஓவர்கள் வழங்கப்பட்டால் மட்டுமே அவர் சரியான பார்மிற்கு வருவார் என்று ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து வெற்றி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோதிய சர்வதேச ஒருநாள் போட்டிகளின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நடைமுறை தற்போது நியூசிலாந்திற்கு எதிரான தொடரிலும் எதிரொலிக்கும் என்று ரசிகர்கள் கருதும் நிலையில், அடுத்த இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.